‘கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில்

483

 

பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வில் இன்று பயணிக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து வைத்து அதில், நரேந்திரமோடி பயணிக்கிறார். இதற்காக இன்றுகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவா விமான நிலையம் சென்றடைந்துள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு செல்லும் மோடி, கப்பலில் பயணிக்கவிருக்கிறார்.

‘கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்க உள்ள பிரதமர் கப்பலை சுற்றிப் பார்க்க உள்ளார். இதன்பின் பிற போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் தங்களது சாகசங்களை செய்து காண்பிக்க உள்ளன’ என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ருஸ்யாவிடமிருந்து ரூ.15ஆயிரம் கோடி அளித்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல், 44,500 தொன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் பரப்பளவாக கொண்ட இந்த கப்பலை 3 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஈடாக கூறலாம்.

ஒரே நேரத்தில் இந்தக் கப்பலில் 1600 பேர் பயணிக்கலாம். ஒரு லட்சம் முட்டைகள், 20 ஆயிரம் லிட்டர் பால், 16 தொன் அரிசி ஆகியவற்றை சேமித்து வைக்க இதில் வசதியுள்ளது. இது ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பலாகும்.

ஏற்கனவே இந்தியாவிடம் ஐஎன்எஸ் விராட் என்ற போர்க் கப்பல் உள்ள நிலையில், விக்ரமாதித்யா வருகையால், ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்தபடி, பல்வேறு கடற்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகசங்களை மோடி பார்வையிட உள்ளார். அப்போது மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண்ஜெட்லி, ரஸ்ய அதிகாரிகள் உடனிருப்பார்கள். சாகசங்களுக்கு பின், கப்பலிலுள்ள மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார். கடந்த மாதம் 26ம்தேதி பிரதமராக பதவியேற்ற மோடி அதன்பிறகு மேற்கொள்ளும் முதல் வெளியூர் சுற்றுப்பயணம் இதுவாகும்.
070907-N-8591H-194

SHARE