சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி கார்த்திக் ஓய்வு

474
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முரளி கார்த்திக் கூறியதாவது:-

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆனால், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது எனக்கு கவுரவமாக இருக்கும். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த என் பெற்றோர், மனைவி ஸ்வேதா, பயிற்சியாளர்கள் எம்.பி. சிங், குர்சரண் சிங் மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்த பிஷன் சிங் பெடி ஆகியோருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என் வாழ்க்கையில் மணீந்தர் சிங்கை மறக்க முடியாது.

மும்பை டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றதை மறக்க முடியாது. இதேபோல் சச்சினிடம் இருந்து பெற்ற இந்தியா டெஸ்ட் கேப், கபில் பாஜியிடம் இருந்துபெற்ற இந்தியா கேப் பெற்றதும் மிகப்பெரிய கவுரவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2000 ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. மொத்தம் 8 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கார்த்திக் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதேபோல் 37 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

SHARE