சவூதியிலிருந்து சித்த சுவாதீனமற்ற நிலையில் நாடு திரும்பிய 19 வயது யுவதி.

413

யுவதியின் தாயாருக்கு கடந்த மாதம் 23ம் திகதியன்று சவூதி இலங்கை தூதரகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் உங்கள் மகள் சுகவீனமாகவுள்ளார். அவரை அனுப்புகிறோம் எனக்குறித்த அதிகாரி தெரிவித்ததாகவும் குறித்த யுவதியின் தாயார் குறிப்பிடுகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரிவில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமொன்றில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற 19 வயது யுவதி ஒருவர் சித்த சுவாதீனமற்ற நிலையில் நேற்று இரவு 11.00 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 6.00 மணியளவில் விமான நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நிசாந்தினி உங்கள் மகள்தானே. அவர் விமான நிலையத்தில் உள்ளார். உடன் வந்து அழைத்து செல்லுங்கள் இல்லையேல் முகாமிற்கு அனுப்பி விடுவோம் எனத்தெரிவித்தனர். இதனையடுத்து எமக்கு எந்தவித வசதியுமில்லை. சிலரின் உதவியுடன் வேன் ஒன்றில் சென்று நேற்று இரவு கூட்டி வந்துள்ளோம் எனவும் மகள் சுயமாக செயற்படுகிறாரில்லை. கதைக்கிறாரில்லை. உணவையும் உட்கொள்கிறாரில்லை எனவும் தாயார் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு பிறந்த எனது மகள் க.பொ.த.பரீட்சையில் சித்தியடைந்திருந்தார். மேலும் படிக்க வசதியின்றி சிலரின் ஏமாற்றால் வெளிநாட்டிற்கு 2012.12.29 ம் திகதி சென்றார். 3 மாதம் தொடர்பில்லை. பின்னர் ஓரிரு நாள் கதைத்தோம். 7 மாதத்தின் பின்னர் தொடர்பு முற்றாக இல்லை. இறுதியாக இந்த நிலையில் வந்து சேர்ந்துள்ளார் எனத் தாயார் மேலும் குறிப்பிட்டார். யுத்தத்தால் பலமுறை பாதிப்புற்ற எல்லைக் கிராமத்தில் உள்ள இக்குடும்பத்திற்கு 7 பிள்ளைகள் உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE