தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கருத்தை முட்டாள்தனமாக கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

429
சாட்சியாளர்களுக்கு பணக் கொடுப்பனவு: ஜீ.எல் பீரிஸின் கருத்துக்கு கிளம்பிய விமர்சனங்கள்
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், பணம் கொடுத்து சாட்சியங்களை பெறுவதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறிய கருத்துக்கு பலரும் தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கருத்தை முட்டாள்தனமாக கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடந்திருந்தால் ஜீ.எல் பீரிஸ் அதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

விசாரணைக்குழு நிதி வழங்கி சாட்சியங்களை பெறவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் சாட்சியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியங்களுக்காக பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட கருத்து தொடர்பில் தகவல் வழங்கியுள்ள தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, கூட்டங்களுக்கோ அல்லது அமர்வுகளுக்கோ வருபவர்களுக்கு போக்குவரத்து செலவுகள் மற்றும் சிறிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுண்டு.

இது அரசசார்பற்ற அமைப்புக்களுக்கு மாத்திரம் அல்ல. அரசாங்க நிறுவனங்களுக்கும் பொதுவான விடயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இடம்இல்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், சாட்சியங்கள் பதிவு செய்யப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இது தொடர்பில் கருத்துரைக்கையில், இவ்வாறான பணம் வழங்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக பணக் கொடுப்பனவுகளை செய்யவில்லை என்று மனிதஉரிமைகள் நடவடிக்கையாளர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே இந்தக்குற்றச்சாட்டை முடியுமானால் அரசாங்கம் நிரூபித்துக்காட்டட்டும் என்று நிமல்கா சவால் விடுத்துள்ளார்.

 

SHARE