தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேச்சு

456
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் ராமபோசா: விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேச்சு
தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ராமபோசா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு உலங்கு வானூர்திகளில் தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ராமபோசா தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர்.

இவர்களை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ராமபோசா வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் சந்திரசிறி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலை நடாத்தவுள்ளார்.

நேற்று இலங்கைக்கு வருகைதந்த ராமபோசா தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.

ராமபோசா- விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேச்சு

இலங்கையில் இடம்பெற்றுவரும்  நெருக்கடி நிலைகளுக்கு தீர்வு காண்பதையே  தாம் விரும்புவதாக தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ  கூறியதாக வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்று தென்னாபிரிக்கக் குழுவினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ராமபோசா எம்மிடம் தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் இடம்பெறும் நெருக்கடி நிலைமைகளுக்கு தென்னாபிரிக்காவில் கைக்கொள்ளப்பட்டுவரும் இனங்களுக்கு இடையிலான சுமூக உறவு நிலையை உதாரணமாகக் கொள்ள முடியுமாக இருந்தால், அதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயார் என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை நிர்வாக நடவடிக்கைகளை சீரான முறையில் முன்னெடுப்பதற்கு மத்திய அரசு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் விடயத்தையும் அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டினேன்.

இலங்கை அரசமைப்பின் 18வது திருத்தம் காரணமாக அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே உள்ளன. இதனால் சட்டரீதியாகப் பிரச்சினைகளை அணுகித் தீர்வு காண முடியாதுள்ளது என்றும் நான் அவர்களுக்கு விளக்கினேன் என வடக்கு முதல்வர் குறிப்பிட்டார்.

TPN NEWS

SHARE