தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி

478
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பேரேராவும், தில்ஷனும் களமிறங்கினர். போட்டி தொடங்கியதிலிருந்து பந்தை சந்திக்க சிரமப்பட்ட பெரைரா 17 பந்துகளில் 7 ரன்கள் குவித்தார். பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சங்கக்காராவும், 7 ரன்னில் அவுட்டானார்.

பின்னர் 4வது விக்கெட்டுக்கு திரிமானே களமிறங்கினார். அவர் 56 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். அதன் பின் வந்த ஜெயவர்தனா 88 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அவுட்டனார். பின்னர் களமிறங்கிய வீரர்களான மேத்யூ, பிரியஞ்சன், குலசேகரா ஆகியோர் முறையே 34, 25, 0 என ரன்களை குவித்தனர். அதன்பின் களமிறங்கிய சேனநாயக 9 ரன்னில் அவுட்டானார். மெண்டிசும், மலிஙகாவும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 267 ரன்களை குவித்தது.

பின்னர் தென்னாப்பிரிக்க அணி தனது பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரராக அம்லாவும், டி காக்கும் களமிறங்கினர். காக் 4 ரன்னிலும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய காலிசும் 1 ரன்னிலும் அவுட்டாக அந்த அணி ரன் குவிப்பில் ஈடுபடாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. 4வது விக்கெட்டுக்கு களமிங்கிய டி வில்லியர்ஸ் தன் பங்குக்கு 55 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக 38.1 ஓவரில் 180 ரன்களை எடுத்து தென்ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. ஆட்டநாயகனாக இலங்கை வீரர் தில்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

SHARE