பாலியல் வன்முறைகள் : பஸ்சில் பிரபல பாடகிக்கு ஏற்பட்ட அவமானம்

445
பெரு நாட்டின் பிரபல தொலைக்காட்சி பாடகி எடிடா குரேரோ (வயது 30) கடந்த மார்ச் மாதம் மூளையில் ரத்தக்கசிவு  மரணமடைந்தார். குரேரோவை அவரது கணவர் பால் ஒலோர்டிகா அடித்து கொன்றுவிட்டார் என கூறப்ட்டது.தற்போது இவர் மீது பெரு போலீசார் கைது வாரண்ட் பிறப்பித்து தேடிவருகின்றனர்.கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அவர் தற்போது ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றார் என்று காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 3 கோடி மக்கள்தொகை கொண்ட பழமைவாத சமூகம் நிரம்பிய பெரு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பொதுவாக விமர்சனங்கள் எழுவதில்லை. பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களோ, உள்நாட்டு வன்முறைகளோ தனியார் விஷயங்களாகக் கருதப்படுவதால் காவல்துறையிலும் பெரிதாகப் புகார்கள் பதிவாவது இல்லை.

பாடகி மரணத்தை தொடர்ந்து பெண்கள் மீதான கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிசத்திற்கு வருகின்றன. கடந்த மே மாதம்தான் பிரபல பாடகியும், நடிகையுமான மகலி சோலியர் என்பவர் தனக்கு நேர்ந்த அவமரியாதை குறித்துத் தெரிவித்திருந்தார். லிமாவில் அவர் பஸ்ஸில் பயணித்தபோது தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு நபர், சுய இன்பம் அனுபவித்து தன்னை கொடுமைக்குள்ளாக்கியதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் இது போன்ற சம்பவங்களுக்கு தரப்படும் புகார்கள் மிகவும் குறைவு என்பதால் பெரு அரசிடம் இவற்றின் கணக்கீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இத்தகைய துன்பங்களினால் 131 பெண்கள் கொலைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றும் அதில் பெரும்பான்மையானோர் 18-லிருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று பெண்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளாமல் காவல்துறையிடம் புகார் அளிக்கவேண்டும் என்று மனுவெலா ரமோஸ் என்ற பெண்கள் உரிமைக் குழுவின் தலைவியான மிலேனா ஜஸ்டோ தெரிவித்தார்.

பெண்கள் நலத்துறை அமைச்சரான கர்மென் ஒமோண்டே அங்கு பிரபலமாக விளங்கும் தேசிய பெண்கள் கைப்பந்து அணியின் பயிற்சியாளர் நடாலியா மலகாவுடன் இணைந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் வண்ணம் ஒரு ஊக்குவிப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டபோது பெண்கள் தங்களுக்கான மரியாதையைப் பெறவும், பேசவும் முன்வர வேண்டும் என்று மலகா குறிப்பிட்டார். தற்போது உலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் பார்வை பெரு மீது விழுந்துள்ளது.

SHARE