பிரச்னையில் இருந்து மீண்டு வந்துள்ளேன்: இயக்குனர் சரண் பேட்டி 

340



செக் மோசடி வழக்கில் கைதான சரண், ‘பிரச்னையிலிருந்து மீண்டு வந்துள்ளேன் என்றார்.காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். சமீபத்தில் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு இயக்குனர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தற்போது வினய் நடிக்கும், ‘ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி வருகிறார் சரண். அவர் நேற்று குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் கூறியது: சிறுவயது முதல் குலசை முத்தாரம்மன் பற்றி பலர் கூறியுள்ளனர். ஆனால் கோயிலுக்கு வந்ததில்லை. எனக்கு பல்வேறு பிரச்னைகள் வந்தது. தற்போது பிரச்னையில் இருந்து மீண்டு வந்துள்ளேன். நானும், எனது நண்பர் சங்கரும் இணைந்து ‘ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை தயாரித்து வருகிறோம். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.

இதில் நடிகர் வினய் மற்றும் 3 கதாநாயகிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். வினய் இருவேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்துவரும் முத்தாரம்மன் பற்றிய பாடல் ஒன்றை நான் எழுதியுள்ளேன். நெல்லையில் 3 நாட்கள் முத்தாரம்மன் கோயில் செட் அமைத்து ஷீட்டிங் நடத்தினோம். முத்தாரம்மன் பாடல் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். தசரா திருவிழாவிற்கு முன்பாக பாடல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ஆயிரத்தில் இருவர் படம் எனக்கும், நடிகர் வினய்க்கும் திருப்புமுனையாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

SHARE