பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

508
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார்.

தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார்.

காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி செல்ல நேரிட்டது.

இதன்காரணமாக மோடி – ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஏற்கனவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்திற்கு தேவையான நிதிகள், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

மேலும், தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் மின்வெட்டு இருக்காது என முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே, அறிவித்து இருக்கிறார். எனவே, இனிமேல் மின்வெட்டை சமாளிப்பதற்காக தமிழகத்திற்கு அதிக அளவில் மின்சாரம் வழங்கவும் மோடியிடம் கோரிக்கை விடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE