மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள கோட்டைமுனை பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றம் வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் சுத்தமான உணவுப் பண்டங்களை பெற்றுகொள்ளும் வகையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி. இராகல் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர் பயிலுனர்கள் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பெருமளவான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.இராகல் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இருந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருமலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.இராகல் மேலும் தெரிவித்தார்.