போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசகட்டமைப்பின் ஓர் ஆயுதமாக, மேலெழுந்துவரும் பௌத்த பேரினவாதிகளின் வன்முறைகள் ஐ.நா மனித உரிமைச்சபை அகண்டதிரையில் அம்பலம்,

382
மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.

தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெற்றிருந்த உபமாநாடொன்றிலேயே இவ்விவகாரம் பேசப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் மதஉரிமைகளுக்கான சிறப்பாய்வறிஞர் (special rapporteur)Heiner Bielefeldt அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த உபமாநாட்டில் , சிறிலங்கா, இந்தியா , வங்கதேசம் மற்றும் நேபால் ஆகிய நாடுகளில் இருந்து கருத்தாளர்கள் அந்தந்த நாடுகளின் நேரடிச் சாட்சியங்களாக பங்கெடுத்துள்ளனர்.

போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசகட்டமைப்பின் ஓர் ஆயுதமாக, மேலெழுந்துவரும் பௌத்த பேரினவாதிகளின் வன்முறைகள், தமிழ்மொழி பேசுகின்ற அனைத்து மக்களது மத சுதந்திரத்துக்கும், அவர்களது வழிபாட்டு உரிமைகளுக்கும் எதிராக தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது.

மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தலக்கள் உடல்ரீதியிலான நேரடி வன்முறைகள், பாலியல்வன்முறைகள், கொலைகள், சமூக புறக்கணிப்புகள் ,ஒன்றுகூடுவதற்கான தடைகள், வழிபாட்டுக்கு கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமை மறுப்புகள், கருத்துரிமைகள் என மத சுதந்திரத்துக்கான அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி இந்த உபமாநாட்டில் கருத்துப்பரிமாறப்பட்டுள்ளது.

இந்த உபமாநாட்டில் சிறிலங்கா விவகாரமே அதிகம் பேசப்பட்டுள்ளமையானது, சிறிலங்கா அரச கட்டமைப்பின் சிங்கள பௌத்தபேரினவாதம், அனைத்துலக அரங்கில் அம்பலமாகி வருகின்றமையினையே எடுத்துக் காட்டுவதாக, இந்த உபமாநாட்டில் பங்கெடுத்திருந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த உபமாநாட்டில் சிங்கள பௌத்த பேரிவானத்தின் வன்முறைகள் அகண்டதிரையில் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.பொதுச்சபை முன் பொங்குதமிழ் எழுச்சியுடன் பெருந்திரளாய் அணி திரள்வோம்: நா.க.த.அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் முன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் நாள் இடம்பெறவிருக்கின்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில், பெருந்திரளாய் அணி திரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்படடுள்ள அறிக்கையில்,

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ம் திகதி நியூயோர்க் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கூட்டத்தில் ஈழத்தமிழ் இனத்தின் மீதான இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரத்தம் தோய்ந்த கைகளுடன் உரை நிகழ்த்த இருக்கின்றார்.

அக்கொடுங்கோலன் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன் சிறிலங்கா அரசின் தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை அனைத்து உலகத்துக்கும் அம்பலப்படுத்த வேண்டும்.

தமிழருக்கான நீதியினைக் கோரும் வகையில் பெரும் அளவில் திரண்டு எமது எதிர்ப்பினைக் காட்டவேண்டும். இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “சங்கே முழங்கு” என்பதற்கேற்ப தமிழீழ விடுதலைக்கான சங்கநாதமாக எமது குரல் அங்கு ஒலிக்க வேண்டும்.

வட அமெரிக்கத் தமிழ் உறவுகள் உணர்வு எழுச்சியோடு, மகிந்தவுக்கு எதிர்ப்புக் காட்டுவதின் மூலம் உலகத்தின் முன்பு ஒரு போர்க் குற்றவாளியாகவும், இன அழிப்பு கொடுங்கோலனாகவும் முன் நிறுத்த முடியும்.

வட அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமன்றி உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவருமே தமது எதிர்ப்பினைக் காட்டி இன அழிப்புக்கு நீதி கோர வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் குறிப்பாக ராஜபக்சவின் இன அழைப்பினை அம்பலப்படுத்தி, ராஜபக்சவுக்கு எதிரான வலுவான குரலினைப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் ஈழத் தமிழருக்கான பரிகார நீதியினை ஐ.நா. பொதுச் சபையின் முன் உறுதியுடன் கோருவதற்காக இந்த எழுச்சி ஓன்று கூடல் அமைய இருகின்றது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பங்கு பற்றுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கனடாவில் இருந்தும் பெருமளவில் மக்கள் பங்குபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரசினால் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலைக்கு எதிராகப் தமிழீழத்தில் போர்க்குரல் எழுப்ப முடியாது இருக்கின்ற போதிலும், எமது தாயக மக்களின் பொங்கு தமிழ் முழக்கமாக, புலம்பெயர் தமிழ் மக்கள் குரல் ஐ. நா. முன்றலில் ஒலிக்க வேண்டும்.

பெருந்திரளாக திரண்டு வாருங்கள். எமது எதிர்ப்பினைக் காட்டி “நியூயோர்க் ஐ.நா.பொதுச்சபை முன் பொங்குதமிழ் எழுச்சியுடன் பெருந்திரளாய் அணிதிரள்வோம்” என்ற வேண்டுகோளினை அன்புரிமையோடு விடுக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyJSdKVmw1.html#sthash.C7Dc2WGq.dpuf

SHARE