மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பரப்புக்கடந்தான் கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதனை உடன் நிறுத்துமாறும் உரியவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
பரப்புக்கடந்தானில் பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதாக அப்பகுதி மக்களால் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து உடன் 03-01-2015 செவ்வாய்க்கிழமை மாலை குறித்த வனப்பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்கு பாரியளவில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு மரங்கள் துண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளமையை நேரில் பார்வையிட்டதுடன் தனது கண்டனத்தினையும் தெரிவித்தார்.
அங்கு அவர் தெரிவிக்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு கட்டுக்கரை குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீரை பரப்புக்கடந்தான் காட்டு வழியாக நாயாத்துக்கு கொண்டு செல்ல அக்கிராம மக்கள் எடுத்த முயற்சியின் போது, காட்டை வெட்டினார்கள் என்று கூறி நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிராக வன வள இலாகா மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது அந்த சந்தர்ப்பத்தில் சட்டத்தரணியாகிய நான் அம்மக்கள் சார்பாக ஆஜராகியிருந்தேன், அங்கு வன வள இலாகா இப்பிரதேசம் வன வள இலாகாவிர்க்குரியது இங்கு சிறு கத்தியோடு கூட வரக்கூடாது என்று நீதிமன்றில் தெரிவித்திருந்ததை இன்று இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் எனவும்,
இது இவ்வாறிருக்க அதே வனவள இலாகாவிர்ர்க்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய அழிவு நடந்திருக்கும் போது ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது…
வன வள இலாகாவிற்க்கும் இவர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ எனவும் சந்தேகம் ஏற்படுகின்றது… அதுமட்டுமன்றி அப்பகுதி பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அமைதி காப்பது ஏன்???
பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்துவரும் பரப்புக்கடந்தான் மக்களிடம் கூட இல்லாத காணி தென் பகுதியை சேர்ந்தவருக்கு வந்தது எப்படி… இதில் பெரிய ஒரு மோசடி கும்பல் இருப்பதாக என்னால் உணர முடிகின்றது. இவ்விடயம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்கும்போது பல உண்மைகள் புலப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களிலே வன இலாகா பல தவறான விடயங்களை மேற்கொள்வதாக எம்மால் அறியப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அச்சங்குளம் பிரதேச மணல் அகழ்வு நடவடிக்கைக்கும் வன இலாகாவே காரணம் என அறிய முடிந்தது…
இவ்வாறாக பல திணைக்களங்கள் மக்களுக்கு தீமை விளைவிக்கக் கூடிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இவ்விடயத்தினை மதிப்புக்குரிய நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நீதிமன்றம் இவ்விடயம் தொடர்பாக தனது தறத்துணிவை பயன்படுத்தி கள விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாயின் பல்வேறு உண்மைகள் புலப்படும்.
இந்த காடழிப்பு தொடர்பாக உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பின் நிற்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.