நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றில் ஆளுந்தரப்பின் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் ஆசனம் பல வருடங்களாக ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஆசனத்தில் ஏனைய உறுப்பினர்கள் அமரமுடியாது. தவறுதலாக அதில் அமர்ந்தாலும் உடன் எழுப்பப்படுவர்.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பட்ஜெட்டை சமர்ப்பிக்க அவர் வருடத்துக்கு ஒருதடவை அல்லது முக்கிய கட்டங்களில் நாடாளுமன்றத்திற்கு வருவார். அதன்பின்னர் அரசமைப்பின் 17ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு, 18ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து 3 மாதங்களுக்கு ஒருதடவை ஜனாதிபதி கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டது. இவ்வாறு வரும் சந்தர்ப்பங்களில் அவர் அந்த ஆசனத்தில் அமர்வார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஜனாதிபதியானார். அவர் ஜனாதிபதியான பின்னர் கடந்த 20 ஆம் திகதி முதலாவதாக சபைக்கு வந்தார். இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட தினமான நேற்று முன்தினமும் சபைக்கு வந்து முன் ஆசனத்தில் அவர் அமர்ந்திருந்தார். எனினும், நேற்றுமுதல் அந்த ஆசனம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சபைக்கு வந்தால் தற்காலிகமாக அந்த ஆசனம் அவருக்கு வழங்கப்படலாம்.