வடபகுதி ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

468
jui_1
தேசிய ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஊடகச் செயலமர்வை நடத்தாதேஎன்று கூறி கொழும்பு இதழியல் கல்லூரிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை முற்பகல் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்பும் குழு என்று தம்மை அடையாளப் படுத்தியவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ரைட்ஸ் நவ்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஊடகச் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து ஊடகவியலாளர்கள் சிலர் கொழும்புக்குச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அத்தகைய செயலமர்வை நடத்தக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பயங்கரவாத ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு நடத்தாதே’, ‘நாட்டைக் காட்டிக்கொடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்பவர்கள் இவர்கள்தான்’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து கொழும்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் நேற்றிரவு பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து பொலிஸார் ஊடகவியலாளர்கள் எவரையும் கைது செய்யவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயிற்சி ஒன்றுக்காக சென்ற ஊடகவியலாளர்கள் சோதனை சாவடியில் வைத்து சோதனையிடப்பட்டு, அவர்களின் வாகனத்தில் கஞ்சா போதை மருந்து இருந்தாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்காக வாகனத்தை பொறுப்பேற்றதுடன் வாகன சாரதியையும் பொலிஸார் கைது செய்தனர் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதனை மறுத்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸார் யாரையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு பின்னர் வாகனமும் சாரதியும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணம் 3 தசாப்த கால யுத்தத்தின் பிடியிலிருந்து மீண்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது.ஆனாலும் ஜனநாயகத்தின் 4வது தூண் என உவமிக்கப்படும் ஊடகத்துறை வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகின்றது. என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் ஓமந்தை பகுதியில் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்த மேற்கொள்ளப்பட்ட முயறசி குறித்து யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடயம் தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது.

நாம் மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக நேற்றைய தினம் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இடம்பெற்ற சம்பவம் அமைந்துள்ளது. யாழ் குடாநாட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை.மாலை 5 மணிக்கு 16 ஊடகவியலாளர்கள் இன்று கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு பற்றிய பயிற்சிப் பட்டறையிpல் கலந்து கொள்ளவதற்காக சென்றிருந்தனர்.

இரு வாகனங்களில் பயணித்த ஊடகவியலாளர்களை யாழ் நகரப் பகுதியிலிருந்து இனந்தெரியாத நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மாங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த இராணுவப் பொலிஸார் ஊடகவியலாளர்களின் பெயர்கள் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யும் போது ஒருவர் மட்டுமே இராணுவப் பொலிஸ் சீருடையில் இருந்துள்ளார் மற்றைய மூவர் சிவில் உடையில் இருந்துள்ளனர்.

எதற்காக சோதனையிடுகின்றீர்கள்? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஆனையிறவு சோதனைச்சாவடியில் நாங்கள் உங்கள் வாகனத்தை மறித்தோம். ஆனால் நீங்கள் நிறுத்தவில்லை. என்ற காரணத்தை மட்டுமே அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பயணித்து ஓமந்தை சோதனைச் சாவடியை அடைந்த போது அங்கே 6 வரையான வாகனங்கள் சோதனைக்காக நின்றிருந்தன. ஆனால் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தை மட்டும், 5 இராணுவச் சிப்பாய்களும், 3பொலிஸாரும் சோதனையிட்டனர்.

வாகனத்தில் இருந்த அனைத்தும் கடுமையாக சோதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு இராணுவச் சிப்பாய் வாகனத்தின் சாரதி இருக்கைக்கு கீழ் ஒரு சிகரட் பெட்டியை போட்டார். அதனை வாகனத்தில் பயணித்த 3 ஊடகவியலாளர்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் அதனை எடுத்து, அதனுள் போதைப் பொருள் (கஞ்சா) இருந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் வாகனத்தையும், ஊடகவியலாளர்களையும், ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே வைத்து ஊடகவியலாளர்களின் அடையாள அட்டைகள் மற்றும், கைத்தொலைபேசிகள், மடிகணனிகள் அனைத்தையும் பொலிஸார் பறித்துக் கொண்டனர்.

பின்னர் தெற்கில் உள்ள ஊடக அமைப்புக்கள் விடயத்தை அறிந்து பொலிஸாருடன் பேசிய பின்னர் ஊடகவியலாளர்களின் உடமைகள் மீண்டும் வழங்கப்பட்டது. எனினும் சாரதியை கைதுசெய்ய வேண்டும் என பொலிஸார் உறுதியாக கூறினர்.

எனினும் சோதனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் போதைப் பொருள் இருந்தாக கூறப்படும் சிகரட் பெட்டியை அங்கே வைத்தமையினை நோரில் பார்த்த ஊடகவியலாளர்கள் சாரதியை கைதுசெய்ய முடியாது. இராணுவ சிப்பாயை கைதுசெய்யுங்கள். என கேட்டபோதும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கே பொலிஸ் நிலையத்திலிருந்து ஊடகவியலாளர்கள் கொழும்பு பயணமாகினர்.

எனவே இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பதனை சுட்டிக்காட்டும் அதேவேளை இவ்வாறான அநாகரிகமான நடவடிக்கைகளினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு ஊடகவியலாளர்களை எந்தவகையிலேனும் முடக்கவேண்டும். அவர்கள் தெற்கில் உள்ள ஊடக சமுகத்துடன் தொடர்பினை பேணக் கூடாது. என்பதில் சிறீலங்கா அரசாங்கம் திடமாக இருப்பதையே நாம் இந்தச் சம்பவத்தின் மூலம் உணர்கிறோம்.

முன்னரும் யாழ்.குடாநாட்டிலிருந்து ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறைக்குச் சென்ற ஊடகவியலாளர்களை அந்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விடாது, சிங்கள இனவாத அமைப்புக்கள் இரு முறை விரட்டிடித்த சம்பவத்தை நாம் இங்கே நினைவுகூர்கிறோம்.

சிறீலங்கா அரசாங்கம் குடாநாட்டு ஊடகவியலளர்களை ஒரு புறம் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கும் நிலையில், மறுபக்கம் அவர்களுடைய தொடர்புகள் பரந்து பட்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் பிரயத்தனம் எடுக்கின்றது.

எனவே இவ்வாறான மிகமோசமானதும், அநாகரிகமானதுமான நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான கபடத்தனமான முயற்சிகளுக்கு மத்தியில் யாழ்.ஊடகவியலாளர்கள் எத்தகைய அச்சுறுத்தல்களுடன் கடமையாற்றுகின்றோம். என்பதனையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

யாழ்.குடாநாட்டிலிருந்து 16 ஊடகவியலாளர்கள் கொழு ம்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைக்காக (வெள்ளிக்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு சென்றிருந்தனர்.

இந்நிலையில் யாழ்.நகரப் பகுதியிலி ருந்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இரவு 7மணியளவி

மேலும் தாங்கள் பயணித்த வாகனத்தை அவ்வாறு வழிமறிக்கவில்லை. எனவும் ஊடக வியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குச் சென்றபோது அங்கே சிவில் உடையில் இரு பொலிஸாரும் 3படையினரும் வாகனத்தை சோதனையிடப் போவதாக கூறியுள்ளனர்(இந்தச் சோதனைச் சாவடியில் சிவில் உடையில் பொலிஸார் நிற்பதில்லை)

அவர்கள் சோதனையிட முயன்றபோது படைச் சிப்பாய் ஒருவர் வாகனத்தின் சாரதி ஆசனத்திற்கு கீழ் ஏதோ ஒன்றினை போட்டதை ஊடகவியலாளர் ஒருவர் பார்த்துள்ளார். அதனை என்ன? என பார்ப்பதற்கு முன்னர் அங்கே நின்ற பொலிஸார் சாரதி ஆசனத்திற்கு கீழ் இருந்து ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதனுள் கஞ்சா இருப்பதாக கூறி வாகனத்தையும் ஊடகவியலாளர்களையும் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

பின்னர் ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திய பின்னர் சாரதியை தாம் கைது செய்யப் போவதாகவும் ஊடகவியலாளர்களை அங்கிருந்து செல்லுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலை யில் சாரதி கைதுசெய்யப்பட்டால் படைச்சிப்பாய் கஞ்சாவை வாகனத்திற்குள் கொண்டுவந்து வைத்தமையினை நாம் நீதிமன்றில் கூறுவோம் என ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் அங்கே சோதனையிட்ட படைச்சிப்பாயை தற்போது விசாரணைக்குட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதும் ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

tpn news

SHARE