இந்தியா சென்று சுமார் மூன்று வார காலம் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., நேற்று பிற்பகலில் கொழும்பு திரும்பியிருந்தார். அதனையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சம்பந்தன் தலைமையில் மாலை கொழும்பில் கூடினர். தற்போதைய அரசியல் நிலைவரங்கள், இந்தியத் தேர்தல் முடிவுகளை அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக ஆராய்ந்தனர் எனத் தெரிகின்றது.
இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மாலை கொழும்பில் கூடி விரிவாக ஆராய்ந்தது.
இந்தியாவில் தேசிய ரீதியில் பெரு வெற்றியீட்டிய பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் பெரு வெற்றியீட்டிய அ.தி.மு.கவின் தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஆகியோருக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைமைகளை விளக்கும் பின்னணியுடன் வாழ்த்துச் செய்திகளை அனுப்பவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அறிய வந்தது.
வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பது எனவும், ஒவ்வொரு அங்கத்துவக் கட்சியும் கூட்டமைப்பின் மாவட்டக் குழுவில் இடம்பெறுவதற்காகத் தத்தமது கட்சி சார்பில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களின் பெயர் விவரங்களை அடுத்த ஒரு வாரத்துக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறிய வந்தது. இன்றைய கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.