வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

198

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாடுகளும் அரச இயந்திரங்களான பொலிசாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வு துறையினராலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக வடக்கு-கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை (02.12) காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட்ட குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

SHARE