கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து தேங்கியமையே விமானம் நிலையம் மூடியமைக்கான காரணம் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னையை வந்தடையும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்ற போதிலும் விடாது பெய்யும் அடை மழையினால் சென்னை விமான நிலையம் திறக்க வாய்ப்பில்லை என அறியமுடிகின்றது..
விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஆரம்பித்த அடைமழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.