பாகிஸ்தான் – பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறைச்சாலையில் இருந்து இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5-ம் திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.