4-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பதிலடி கொடுக்குமா இந்தியா?

455

இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது.

5 டெஸ்ட் கொண்ட தொடரில் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்தியா 95 ரன்னில் வெற்றி பெற்றது.

சவுத்தம்டனில் நடைபெற்ற 3–வது டெஸ்டில் இங்கிலாந்து 266 ரன்னில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1–1 என்ற சமநிலையில் உள்ளது.

3–வது டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு நாளைய 4–வது டெஸ்டில் இந்திய அணி பதிலடி கொடுத்து முன்னிலை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடக்க வீரர் தவானின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் மோசமாக இருக்கிறது.

இதனால் அவருக்கு பதிலாக சீனியர் வீரரான கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். காம்பீர் கடைசியாக 2012–ம் ஆண்டு டெஸ்டில் விளையாடினார்.

இதேபோல அணியின் முதன்மை சுழற்பந்து வீரரான அஸ்வினுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கடந்த 3 டெஸ்டிலும் அவர் இடம் பெறவில்லை. ஜடேஜா அல்லது ரோகித் சர்மா நீக்கப்படலாம்.

ஒரு வேளை காம்பீர் இடம் பெறாவிட்டால் முரளி விஜய்யுடன் புஜாரா தொடக்க வீரராக ஆடலாம். ரோகித்சர்மா தொடர்ந்து நீடிக்கலாம். தவான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கணுக்கால் வீக்கத்தால் அவதிப்பட்டு வந்த புவனேஸ்வர்குமார் அதில் இருந்து குணமடைந்து வருகிறார். நேற்று பயிற்சியில் ஈடுபட்டார்.

முகமது ஷமியுடன் இணைந்து அவர் தொடக்கத்தில் பந்து வீசுவார். இஷாந்த்சர்மா உடல் தகுதி பெறாததால் நாளைய டெஸ்டிலும் ஆடமாட்டார். லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அவர் கடந்த டெஸ்டில் காயம் காரணமாக ஆடவில்லை.

அவரது இடத்தில் இடம் பெற்ற புதுமுக வீரர் பங்கஜ் சிங்கால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த இயலவில்லை. இதனால் பங்கஜ்சிங்குக்கு பதிலாக வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி இந்த டெஸ்டில் வெல்லலாம். வெற்றி பெற முடியாவிட்டாலும் தொடரை சமன் செய்ய ‘டிரா’ செய்யும் வகையில் ஆடலாம்.

புஜாரா, வீராட் கோலி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதேபோல முரளி விஜய்யும், ரகானேயும் தங்களது பங்களிப்பை தொடர்ந்து அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த அணியும் சிறப்பாக ஆடினால் தான் டெஸ்ட் தொடரை வெல்ல இயலும்.

இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் வென்று 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது 3–வது டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக சுழற்பந்து வீரர் மொய்ன் அலி அந்த அணியின் முதுகெலும்பாக இருப்பார். கேப்டன் கூக், பேலன்ஸ், இயன்பெல், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற சிறப்பாக வீரர்களும் இங்கிலாந்து அணியில் உள்ளார்.

நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SHARE