507
சீனாவில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து 43 பேர் படுகாயம்

சீனாவில் யுனான் மாகாணத்தில் யிங்ஜியாங் என்ற இடத்தில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொது மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர்.

அவற்றில் இருந்து 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. அங்கிருந்த பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இங்கு 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த வாரமும் இதே பகுதியில்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்பகுதி மியான்மரின் எல்லையில் உள்ளது.

இதனால் அங்குள்ள கசின் மாகாண தலைநகரான மியித்கினா நகரிலும் சில வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது.

SHARE