388
பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 400 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் தலிபான், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகள் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அடிக்கடி தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர்.

கடந்த மாதம் கராச்சி விமான நிலையத்தில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 29 பேர் பலியாகினர்.

அதைத்தொடர்ந்து வடக்கு வசிரிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதலை தொடங்கியது. அவர்களின் முகாம்கள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலுக்கு ‘ஷார்ப்– இ–அஷ்ப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கு வசதியாக அப்பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஹவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார். தீவிரவாதிகளுடன் ஆன சண்டையில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் இருந்து 8 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

SHARE