அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார். ஆனால், வடக்கு முஸ்லிம்களை அரசு பாதுகாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். ரிஷாத் குழுவினர் அரசிலிருந்து வெளியேறியமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசின் பிரசார செயற்பாடுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் பங்காளிக் கட்சியாக இருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று திங்கட்கிழமை எதிரணிப் பக்கம் தாவியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நீண்டகாலமாக அரசுடன் இணைந்து செயற்பட்டு வந்தது.
எனினும், அக்கட்சியின் ரிஷாத் தலைமையிலான ஒரு பகுதியினர், அரசிலிருந்து வெளியேறினர். இது குறித்து எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ரிஷாத் கட்சியின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா எம்முடன் இருக்கின்றார். அத்துடன், அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மேற்படி முடிவை தாம் அங்கீகரிக்கப்போவதில்லை என்றும், அரசுடனேயே தொடர்ந்தும் செயற்படப் போவதாகவும் என்னிடம் உறுதியளித்துள்ளனர். எனவே, பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்குவார்கள் என நம்புகின்றேன். கடந்த சனிக்கிழமையும் ரிஷாத்துடன் நான் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தேன். நிகழ்வு முடிவடைந்த பின்னர் அவருடன் நான் நீண்ட நேரம் பேச்சு நடத்தினேன்.
அவர் கவலைகளைக் கொட்டித் தீர்த்தார். ஆனால், இவ்வாறானதொரு முடிவை எடுக்கவிருப்பதாக அறிவிக்கவில்லை. ரிஷாத் எம்முடன் அரசியல் கலந்துரையாடலில் ஈடுபடவில்லை. தனிப்பட்ட பிரச்சினை குறித்தே, அதாவது, எமது கட்சி அல்லாத, அரசியலுடன் தொடர்புடைய ஊடகவியலாளர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினை குறித்தே அடிக்கடி பேசினார். ரிஷாத்துக்கும் எமக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இல்லை. ரிஷாத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் வழங்கினேன். வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் என்ற அடிப்படையிலேயே உதவிகளை வழங்கினேன். அவருடன் எவ்வித முரண்பாடும் இல்லை.
ரிஷாத் அரசிலிருந்து வெளியேறியமை அரசுக்கு பாதிப்பாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எனினும், இதனால், வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கே கூடுதல் பாதிப்பு ஏற்படும். அவர்களை ரிஷாத் பதியுதீன் காட்டிக்கொடுத்துள்ளார். அக்கட்சியினரின் மேற்படி முடிவால், அரசுக்கு சாதகமான சூழல் ஏற்படவும் இடமுள்ளது. ரிஷாத் பதியுதீனால் மன்னாரில் எமக்கு இல்லாமல்போன கத்தோலிக்க மற்றும் தமிழ் மீனவர்கள் எம்முடன் இணையக்கூடும். எனவே, ரிஷாத் குழுவினர் அரசிலிருந்து வெளியேறியமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசின் பிரசார செயற்பாடுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை” – என்றார்.