அனந்தி வீதியினில் மறியல் போராட்டம்! கீரிமலைக்கு செல்லவும் அனுமதியில்லை!!

499

 

உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்துள்ளார்.

அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையினில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையினில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை சாவடி முன்பதாக இப்போராட்டத்தினை கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக முன்னெடுத்து வருகின்றார்.

முன்னதாக உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையினில் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கீரிமலைக்குச்செல்லும் பிரதான வீதி மார்க்கங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன. அந்தப் பிரதான வீதிகளினூடாகவோ குறுக்கு வீதிகளினூடாகவோ யாரும் கீரிமலைக்குச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையினில் குறித்த புதிய சோதனை சாவடியொன்றினில் அனந்தி வழிமறிக்கப்பட்ட நிலையினில் தன்னை கீரிலைக்கு செல்ல அனுமதிக்க கோரி வீதியின் நடவினில் அமர்ந்து அவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.அவ்வேளையினில் தான் படை அதிகாரிகளினால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்த அவர் தன்னை புகைப்படமெடுத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

கீரிமலை சிங்களவர்களிற்கு மட்டும்!!எந்தவொரு தமிழ் மகனையும் காணமுடியவில்லை!!

கீரிமலையினில் படையினரை தவிர வேறெவருமில்லையென தெரிவிக்கின்றார் வலி.வடக்கு பிரதேச சபை பிரதி தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன்.நேரடியாக அப்பகுதிக்கு சென்றிருந்த அவர் படையினரை தவிர வேறு எந்தவொரு தமிழ் மகனையும் காணமுடியவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப்பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலாத்துறை பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE