அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை சுட்டுகொன்ற இந்திய மாணவன்!

72

 

அமெரிக்காவில் குடியிருப்பு ஒன்றில் வசிந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை இந்திய மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்த 38 வயதான யஷ்குமார் பிரம்மபட் அவரது பெற்றோர் 72 வயதான திலீப்குமார் பிரம்மபட் 72 வயதான பிந்து பிரம்மபட் ஆகியோர் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்குமாரின் சகோதரர் மகன் 23 வயதான ஓம் பிரம்மபட் நியூ ஜெர்சி வந்து இவர்களுடன் தங்கி படித்து வந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அவர்களின் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் 2வது மாடியில் திலிப் மற்றும் பிந்து இறந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

பின்னர் யஷ்குமார் உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக, அந்த வீட்டில் இருந்த ஓம் பிரம்மபட்டை பொலிஸார் விசாரித்தனர்.

அப்போது, கைக்துப்பாக்கி மூலம் அவர்களை சுட்டதாகவும் அந்த துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது, கொலை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று பொலிஸார் அதிகாரி தெரிவித்தார்.

SHARE