அரசின் ஊது குழலாக இருந்துகொண்டு தெரிவுக்குழுவில் பங்கேற்க எமக்கு அழைப்பு விடக்கூடாது

527
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளவேண்டும். என விடுக்கப்படும் அழைப்பு மிக போலியானவை. என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்குபற்றவேண்டும். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், போர் நடைபெற்றபோது இதே அமைச்சர் கூறினார், போர் நிறைவடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக. ஆனால் போர் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகின்ற போதும் அவர் அரசியலில் தொடர்ந்தும் இருக்கின்றார். இந்நிலையில் இவருடைய வாக்குறுதியை நம்பி எந்தவொரு விடயத்திலும் இறங்க முடியாது.

15-WIKILEAKSimages (1)

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதற்காக பங்குபற்றவில்லை என்பதனை முழுமையாக வெளிப்படுத்திருக்கின்றது. எனவே நாம் பங்குபற்றவேண்டும் என நினைத்தால் அரசாங்கத்திற்கும் எமக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். பேச்சுக்களில் சாதகமான விளைவுகள் பெறப் பட்டால் மட்டுமே தெரிவுக்குழுவில் நாம் பங்குபற்ற முடியும்.

அதனை விடுத்து 31 பேர் உள்ள தெரிவுக்குழுவில் மூன்று பேர் கூட்டமைப்பினராக இருந்து கொண்டு எதனையும் சாதிக்க முடியாது. இவற்றை விட தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதே
நோக்கம் என்றால். அல்லது தமிழ் மக்களின் நலன்களில் இந்த அமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் தமிழர் தாயகத்தில் போரின் பின்னால் நடந்து கொண்டிருக்கும்,

அநீதிகளை தட்டிக்கேட்டிருக்க வேண்டும். தற்போதும் கூட சுற்றிவளைப்புக்கள், கைதுகள், நிலப்பறிப்புக்கள், படைக்குவிப்புக்கள் என தமிழ் இனத்தின் மீதான அநீதி திணிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டேதானிருக்கின்றன. எனவே குறித்த அமைச்சர், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் முதலில் பேசவேண்டும். அதில் அரசாங்கம் கருசனையற்றிருந்தால், அப்போது பதவி விலகட்டும் நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு செய்யாமல் நிலத்தை பறிப்பு, படைக்குவிப்பு, சுற்றிவளைப்பு போன்றனவற்றுக்கெல்லாம் அரசாங்கம் கூறும் போலியான நியாயங்களை அப்படியே ஆமோதிக்கும் இந்த அமைச்சர், தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குதீர்வு காண்பதற்காக கூட்டமைப்பு தெரிவுக்குழுவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுப்பது நகைப்பிற்குரியது.

மேலும் மங்கள முனசிங்க காலத்தில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நான் உறுப்பினராக இருந்தேன். அந்த தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு என்ன நடந்தது? இன்றுவரையில் அந்த அறிக்கை நாடாளுமன்றில் வீசப்பட்டுக் கிடக்கின்றது. இதேபோன்றே காலத்தை வீணடிக்கவும், தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றவுமே இந்த நாடகங்கள்.

download (1)

இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஒன்றுமில்லை என்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியாமல் இல்லை. அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அரசாங்கத்தின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டிய கட்டாயகத்தில் அவர் இருக்கின்றார். அதற்காகவே எமக்கான இந்த அழைப்பினை அவர் விடுத்திருக்கின்றார்.

எனவே அவருடைய அழைப்பினை நாம் நிராகரிக்கிறோம். உன்மையில் அவர் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டிருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினைக் காணவேண்டும். அதனை விடுத்து அரசின் ஊது குழலாக இருந்துகொண்டு தெரிவுக்குழுவில் பங்கேற்க எமக்கு அழைப்பு விடக்கூடாது என்றார்.

 

SHARE