“தேசிய இனப்பிரச்சினைக்கு நாளை வேண்டுமென்றாலும் எம்மால் அரசியல் தீர்வை வழங்கமுடியும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை ஏற்காது. இனப்பிரச்சினையை ‘பிச்சைக்காரன் புண்போல்’ வைத்துக்கொண்டு அரசியல் நடத்தவே அது விரும்புகின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். ஞாயிறுவார இதழ்களின் ஊடகவியலாளர்களுக்கு அலரி மாளிகையில் வைத்து வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல் தீர்வு, பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கு அரசிடம் தீர்வைக் காண அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
ஆனால், அதைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையோ, அக்கறையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடையாது. அமெரிக்கா, இந்தியா அல்லது ஜெனிவா மூலம் தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டமைப்பு நினைக்கின்றது. குறிப்பாக தீர்வு வழங்கப்பட்டு விட்டால், கூட்டமைப்பால் அரசியல் செய்யமுடியாது. அதனால்தான் அவர்கள் தீர்வு காணும் விடயத்தில் ஆர்வமின்றி செயற்படுகின்றனர். தங்களது அரசியல் தேவைகளுக்குத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வராமல், அதை பிச்சைக்காரன் புண்போல வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கே வேண்டுமென்றாலும் எம்மால் தீர்வு தர முடியும்.ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வந்தாலும் அங்கு இன்னும் நாம் அரசியல் நடவடிக்கையில் இறங்கவில்லை. அரசியல் செய்யவும் இல்லை.
இதுகூட காரணமாக இருக்கலாம். எனினும், மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு முன்னரே நிலைமை பற்றிக் கணிப்பு கூற முடியாது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிப் பக்கம் சென்று விட்டதால் மக்களும் அப்பக்கமே சென்றுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டே கருத்துகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், நிலைமைகள் மாறலாம். எமக்கும் வடக்கில் பிரதிநிதிகள் இருக்கின்றனர். முதற் தடவையாக சுதந்திரக் கட்சியில் இருந்து அங்கஜன் வட மாகாண சபைக்கு தெரிவாகியிருக்கிறார். வவுனியாவில் இருந்தும் இரு சிங்கள உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது எம்முடன் சுமுகமாக பேசுகின்றனர். எனவே, கடந்த முறையைவிட இம்முறை வடக்கில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்”