இந்தியப் பிரதமரின் வருகையின் மூலம் தமிழ் மக்களின் உரிமை பற்றிய நம்பிக்கை தெரிகிறது: மாவை

324

 

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கிற்கான பணிமனையான நெய்தலகம் இன்று தாளையடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கட்சியின் அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா மற்றும் பா.உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், சயந்தன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வடமராட்சி கிழக்கு மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவீரரின் தாயார் மங்கள விளக்கேற்றியதை தொடர்ந்து நெய்தலகம் பெயர்பலகையினை பா.உறுப்பினர் மாவை.சேனாதிராஜா திரைநீக்கம் செய்துவைத்தார்.

அத்துடன், பா.உறுப்பினர் சி.சிறீதரனுடன் இணைந்து நெய்தலகத்தின் கணணி நிலையம், நூலகம் பணிமனை என்பவற்றை நாடாவெட்டி திறந்து வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தார் மாவை சேனாதிராஜா.

வரவேற்புரையையும் வடமராட்சி கிழக்கு பற்றிய ஓர் அறிமுக உரையையும் சமூக ஆர்வலர் சசிகரன் வழங்கினார்.

அவர் தனது உரையில்,

வடமராட்சி கிழக்கிற்கு உரிய மக்கள் பிரநிதித்துவங்கள் வீதி, கல்வி, போக்குவரத்து, வாழ்வாதாரம் போன்றவற்றில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

இங்கு சிறப்புரைகளை பா.உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, பா.உறுப்பினர் சி.சிறீதரன், பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட் ஆகியோர் நிகழ்த்தி இருந்தனர்.

இங்கு பா.உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜா தனது உரையில்,

வடமராட்சி கிழக்கில் எமது மக்களின் நலன்கருதி ஒரு கட்சிக் காரியாலயத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இனி இந்த பணிமனையின் ஊடாக மக்கள் தங்கள் தேவைகளை கருத்துக்களை எமக்கு தெரிவிக்க சந்தர்ப்பமாக அமைக்கின்றது.

நெய்தலகம் என்பது எமது பாரம்பரியத்தோடு ஒழுக்கத்தோடு ஒட்டியதாக அமைகின்றது. சங்ககாலத்தின் நில ஒழுக்கங்களில் ஒன்றாக நெய்தலின் பண்பு நம்மோடு பயணிக்கின்றது.

இந்த மண் நமது உரிமைப் போராட்டத்தில் நிறைந்த அர்ப்பணிப்புக்களை செய்த மண். அந்த அடிப்படையில்தான் இந்தி விழாவின் ஆரம்பித்திலேயே அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்த தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.

நமது அர்ப்பணிப்புக்கள் வீண் போக கூடாது.நாம் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் பணி செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அது மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.

இந்த நாட்டிலே ஒரு அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தன் மூலம் எமது மக்கள் தலைமையுடன் இணைந்து மிக நேர்த்தியான தீர்மானிப்பவர்களாக மாறியிருக்கின்றார்கள்.

அதன் அடைப்படையில் இன்று மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. எமது நிலத்திற்கு இந்திய பிரதமர் வந்துபோயிருக்கின்றார். அது ஒரு நல்ல சமிக்ஞை.

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கலந்து கொண்ட நிகழ்வுகளில் எமது உணர்வுகள் உரிமைகள் தொடர்பாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தன் கருத்துக்களை சாதகமாக வெளியிட்டிருக்கின்றார்.

தான் சில இடங்களில் மனம் நெகிழ்ந்துபோனதாக கூறியிருக்கின்றார். சமஸ்டி அடிப்படையிலான தீர்வின் நன்மைகள் இந்தியாவோடு ஒப்பிட்டு ஒரு சேதியை சொல்லி சென்றிருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்தியப் பிரதமரின் வருகையின் பின்னரான ராஜதந்திர நகர்வுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாமே அவர் வரவுக்கு அதாவது, தமிழ் மக்களின் தீர்மானங்கள்தான் அவரின் இலங்கை வரவுக்கு காரணம். குறிப்பாக ஜனாதிபதியை மாற்றியது. நாம் மோடி அவர்களை சம்மந்தன் அவர்களின் தலைமையில் சந்தித்தபொழுது அவர் எம்மிடம் கேட்டார் நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்று, நாம் ஆம் என்றோம்.

அதன்படி எமது மக்களின் உரிமைகள் வாழ்வாதாரம், பொருளாதார தேவைகள் பற்றி வேண்டிக் கொண்டோம். அதற்கு இந்திய பிரதமர் நம்பிக்கை ஊட்டும் பதில்களை தந்துள்ளார் என தெரிவித்தார்.

நெய்தலகம் திறப்பு விழாவிலே கலந்து கொண்ட பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது உரையில், 

வடமராட்சி கிழக்கு குடத்தனையை பிறப்பிடமாகக் கொண்டவன் என்ற வகையில் இந்த பணிமனை திறக்கப்படுவது மகிழ்ச்சி தருகின்றது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்று சொல்வார்கள். போரால் பாதிக்கபட்ட மக்களின் மீள் நிமிர்வுக்கு இத்தகைய பணிமனை வழிவகுக்கும் என்ற அடிப்படையில் இந்த பணிமனையின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

நாம் தோற்கடிக்கப்பட்டவர்கள் சொல்லப்படுகின்ற நிலையில் இருந்து ஒரு வித்தியாசமான பொறிமுறையினடாக பயணித்து நாம் மீள நிமிரவேண்டும்.

ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என சொல்லப்பட்டால் ஆம் அப்படியே இருக்ககட்டும். அது ஒரு வீர சரித்திரம். அதில் இருந்து நாம் எழுகின்ற தந்திரத்தை கொண்டவர்களாக பொருளாதார ரீதியில் தொழில்நுட்ப ரீதியில் எமது அறிவைப் பயன்படுத்தி நாம் வெல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இது வித்தியாசமான காலம். இதில் ஒரு வித்தியாசமான பொறிமுறையை நாம் கையாள வேண்டும். சற்றுப்பின் தள்ளிப் பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுத்து வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.

இப்பொழுதும் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சரியான தலைமைத்துவத்தை மக்களின் எண்ணங்கள் உணர்ந்து கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

இனியும் சோரம் போகாத உரிமைகளை விட்டுக் கொடுக்காத ராஜதந்திரம் மிக்க தலைமைத்துவத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும். அதற்கு மக்களாகிய உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் அவசியம்.

மக்கள் தெளிவாக இருப்பதை நான் சந்திப்புக்களின்போது உணர்ந்துள்ளேன். நாம் ஆற்றைக் கடக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இப்பொழுது படகில் ஏறி அமர்ந்துள்ளோம். படகை கவிழ்க்காமல் கரை சேருவது நம்கையில்தான் இருக்கின்றது. நாம் அவசரப்பட முடியாது நிதானம் வேண்டும் என்றார்.

 

SHARE