இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு கைப்பற்றுமா?: விளையாட்டு மந்திரி பதில்

384
இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சூதாட்டம் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி எழுவதால் அதனை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரச்சினை டெல்லி மேல்-சபையில் நேற்று எதிரொலித்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய விளையாட்டு மந்திரி சர்பானந்தா சோனாவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பாகும். இது சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு கையகப்படுத்தி அதன் அன்றாட பணிகளை கவனிப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட அனைத்து தேசிய விளையாட்டு அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

விளையாட்டில் நடைபெறும் சூதாட்டம் உள்பட நியாயமற்ற நடவடிக்கைகளை தடுக்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டு இருக்கிறது. தேசிய விளையாட்டு அமைப்பின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

SHARE