இனிவரும் காலங்களிலும் கூட, ஐ.தே.கவினால் தனித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது-சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று

472

 

-சுப்பராஜன்-

mithiripala1

லங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64 வருடங்களில் சந்திக்காத பெரும் நெருக்கடி ஒன்றை இன்று எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியை உருவாக்கியதில் முக்கியமான பங்கை வகித்தவர்கள் இருவர். ஒருவர் அக்கட்சியை 1951இல் ஸ்தாபித்ததில் பிரதான பங்கு வகித்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க. மற்றவர் அவரது எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

இவர்கள் இருவரும் செய்த மிகப்பெரும் தவறு முன்னொருபோதும் இல்லாதவகையில், அக்கட்சியை முன்னர் தலைமை தாங்கியவர்கள் ஒருபோதும் எண்ணிப்பார்த்திருக்காத வகையில், அக்கட்சியின் பரம அரசியல் வைரியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைத்தது. அதற்கு அவர்கள் சொல்லும் ஒரேயொரு காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதேச்சாதிகாரம் மிக்க, ஊழல்மிக்க, குடும்ப ஆதிக்கம் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்காகவே ஐ.தே.கவுடன் புனிதக் கூட்டணி அமைக்கப்பட்டது என்பதுதான்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டில் சில உண்மைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் சக்தியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற மாபெரும் அணியும் இருக்கத்தக்கதாக காலம் காலமாக நாட்டு மக்களின் பிரதான விரோதியாக இருக்கும் ஐ.தே.கவின் கூட்டுத்தான் கிடைத்ததா? இது ஒரு உள்ளுர் திருடனைப் பிடிப்பதற்காக சர்வதேச கொள்ளைக்காரனுடன் கூட்டுச் சேர்வதற்கு ஒப்பானதே அன்றி வேறல்ல.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த பண்டாரநாயக்கவும், அவரது சகாக்களான டி.ஏ.ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்), எஸ்.டி.பண்டாரநாயக்க (முன்னாள் கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர்) போன்றோரும் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்ற வெறும் ஆசையில் அதை உருவாக்கவில்லை.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசைப் பொறுப்பேற்ற டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசு நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய சார்புக் கொள்கையையும், பிற்போக்கான நிலப்பிரபுத்துவ சார்பு, முதலாளித்துவ சார்புக் கொள்கைகளையும் பின்பற்றிய காரணத்தினாலேயே அவ்வரசில் அங்கம் வகித்த பண்டாரநாயக்கவும் அவரது சகாக்களும் அதிலிருந்து வெளியேறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினர். அவர்களது கொள்கைகளை மக்கள் பெருமளவில் விரும்பி ஆதரித்த காரணத்தால்தான் கட்சி ஆரம்பித்து 5 வருடங்களில் – 1956இல் – சுதந்திரக் கட்சி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அன்றிலிருந்து பண்டாரநாயக்கவும், பின்னர் அவர் 1959இல் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது மனைவி சிறீமாவோவும், தீவிரமான ஏகாதிபத்திய விரோத, நிலப்பிரபுத்துவ விரோத, பெரும் முதலாளித்துவ விரோத மக்கள் சார்புக் கொள்கைகளை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். ஏகாதிபத்திய சக்திகளும், ஐ.தே.க தலைமையிலான உள்ளுர் பிற்போக்கு சக்திகளும் அவர்களுக்குப் பலவிதமான நெருக்கடிகளைக் (கொலை, இராணுவச்சதி முயற்சி) கொடுத்த போதும், அவர்கள் தமது நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. அதற்கு ஒரு காரணம் அவ்வரசுகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் கொடுத்த ஆதரவுமாகும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைதாங்கிய அரசுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஓரளவு தளர்ந்திருந்த காலம் சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலம் என்று சொல்லலாம். அதற்கு ஒரு காரணம் அவர் மேற்கத்தைய சக்திகளைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘வென்றெடுப்பதற்காக’ என்று இன்று சில அவரது ஆதரவாளர்கள் காரணம் கூறினாலும், அதனாலும் கூட அவர் எதனையும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை.

அவரது மேற்கத்தைய சார்பான வெளிநாட்டு அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரின் முயற்சிகள் காரணமாக மேற்கத்தைய நாடுகள் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்தாலும், அதற்குப் பிரதியுபகாரமாக நோர்வேயின் எரிக் சோல்கெய்ம்மை சமாதான முயற்சிகள் என்ற போர்வையில் இலங்கை விவகாரங்களில் உள் நுழைத்து அப்பம் பங்கிடும் குரங்குகளாக இருந்து கொண்டன. அதன் காரணமாக இலங்கையில் யுத்தம் முடிவுறாமல் இருக்கும் சூழ்நிலையை அவை உருவாக்கிக் கொண்டன. மறுபக்கத்தில் பொருளாதார ரீதியாகவும் இலங்கையை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மேலும் கூடுதலாக விடுவிக்கும் நடவடிக்கைகளையோ, பாரிய பொருளாதார நடவடிக்கைகளையோ சந்திகாவின் அரசு மேற்கொள்ளவில்லை. அவ்வாறாக சந்திரிகாவின் அரசு முன்னைய சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் செய்தது போன்று எந்தவொரு குறிப்பிடத்தக்க சாதனைiயுயம் செய்யவில்லை.

இக்காலகட்டத்தில் மேற்கத்தைய நாடுகளைத் திருப்திப்படுத்தும் விதமாக சந்திரிகா சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசின் கொள்கைகளை சமனப்படுத்தி அல்லது சமரசப்படுத்திக் கொண்டார். புலிகளுக்குள் பிளவு தோன்றி அவ்வியக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதிகளான கருணா, பிள்ளையான் போன்றோர் பிரிந்து சென்று அவ்வியக்கம் பலவீனப்பட்ட பொழுது, புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்குப் புலிகளை அழிப்பதற்கு வடக்கிலிருந்து தனது படையணிகளை அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் சந்திரிகாவின் இராணுவம் பிரபாகரனின் படைகள் வெருகல் ஆற்றைக் கடந்து வாகரைக்குச் சென்று பிரபாகரனுக்கு எதிரான கிளர்ச்சிப் புலிகளை அழிப்பதற்கு வழிவிட்டதால் அநியாயமாக 300 வரையிலான கிளர்ச்சிப் புலிகள் கொல்லப்பட்டனர். இதுவும் அவரது ஆட்சியின் கறைபடிந்த ஒரு அத்தியாயம்.

chandrika

இத்தகைய சூழ்நிலையில்தான் 2005இல் ஜனாதிபதியாகத் தெரிவான மகந்த ராஜபக்ச, புலிகளின் வழமையான சூழ்ச்சிகளுக்கு விட்டுக் கொடுக்காது போரை உறுதியாக நடாத்தி புலிகளை இலங்கை மண்ணிலிருந்து முற்றுமுழுதாக அழித்து உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டினார். மகிந்தவின் இந்த நடவடிக்கைகளும், இலங்கையை தமது ஒரு ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கு எத்தனித்துக் கொண்டு இருந்த வெளிநாட்டு சக்திகளின் திட்டங்களுக்கு இடம் கொடாமையும்தான், மகிந்தவின் அரசை உள்நாட்டு – வெளிநாட்டுச் சக்திகள் கூட்டுச் சேர்ந்து வீழ்த்தியதற்கான முக்கியமான காரணம். அவரது அரசின் எதேச்சாதிகாரம், ஊழல், குடும்ப ஆட்சி எனக் கூறப்படும் காரணங்கள் எல்லாம் (சில உண்மைகள் இருந்தபோதும்) உண்மையை மறைப்பதற்கு தொங்கவிடப்பட்ட திரைகளாகும்.

தமது பழைய நம்பிக்கை நட்சத்திரமான ஐ.தே.க இலங்கையில் ஒளி குன்றிப் போனதானதால்தான் வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகள் இந்தமுறை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவரையே தமது பக்கம் இழுத்தெடுத்து ஆட்சி அதிகாரத்தைத் தமக்கு சாதகமாக மாற்றியமைத்துள்ளனர். அதற்கு சந்திகா துணை போனதின் மூலம் அக்கட்சியில் தனது தந்தை – தாய் உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்துக்கு விரோதமாகச் சென்றுள்ளார்.

இனிவரும் காலங்களிலும் கூட, ஐ.தே.கவினால் தனித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பது வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகளுக்குத் தெரியும். அதனால் ஐ.தே.கவுக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒட்டுப்போட்டு, இரண்டு முதலாளித்துவக் கட்சிகளையும் ஒரு அணியாக்கி அந்தக் குதிரையின் மீது சவாரி செய்ய இந்த வெளிநாட்டு சக்திகள் திட்டமிடுகின்றன. ஆனால் அது நடக்கப் போவதில்லை.

ஏனெனில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ன நோக்கத்துக்காகத் தோற்றுவிக்கப்படதோ அதன் வரலாற்றுக் கடமை இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. நாட்டின் பூரண சுதந்திரம், இறைமை, ஜனநாயக அரசமைப்பு என்பன சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை ஒரு இடதுசாரித் தலைமையால்தான் பூரணமாக நிறைவேற்ற முடியும் என்ற போதிலும், நாட்டின் அனைத்து தேசபக்த சக்திகளையும் கூடுதலான அளவில் அளாவி நிற்கும் சுதந்திரக் கட்சிக்கு அதில் இன்னமும் முக்கியமான ஒரு பங்களிப்பு இருக்கிறது. அக்கட்சி பிரதிநிதித்துவம் செய்யும் சக்திகளின் பங்களிப்பு இல்லாமல் இந்தக் கடமையை இடதுசாரி சக்திகளால் ஒருபோதும் தனித்து நிறைவேற்ற முடியாது.

எனவே தனி மனிதர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியையோ அல்லது நாட்டின் தலைவிதியையோ மாற்றுவதற்கு எத்தனித்தாலும், மக்களும் வரலாற்றுப் போக்கும் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை. அதனை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பான்மையினர் தமது கருத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தியும் வருகின்றனர்.

இன்றைய மாற்றம் என்பது தற்காலிகமானது மட்டுமே. சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இதற்கு முன்னரும் பல வலதுசாரி அணிகள் – சி.பி.டி.சில்வா தலைமையில், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையில் – எனத் தோன்றியிருக்கின்றன. ஆனால் அவற்றால் அக்கட்சியை அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மாற்ற முடியவில்லை. அதேபோல இப்பொழுது அக்கட்சியில் உருவாகியுள்ள சந்திரிகா – மைத்திரிபால சிறிசேன வலதுசாரி அணியின் பிடியிலிருந்தும் சுதந்திரக் கட்சி நிச்சயமாக மீண்டு எழுந்து வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

SHARE