இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
இந்த இராப்போசன விருந்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,
இந்திய வெளிவிவகார அமைச்சராக முதல்முறையாக இலங்கைக்கு வந்துள்ளேன். ஆனால் இலங்கை எனக்கு புதியது அல்ல. நான் இங்கு பலமுறை வந்துள்ளேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இந்த அழகிய தீவுக்கு வந்திருக்கிறேன்.
முதலில் நான் இலங்கை அரசாங்கத்துக்கும், எனக்கும் எனது குழுவினதுக்கும் வெளிவிவகார அமைச்சர் அளித்த விருந்துக்காகவும் எனது உண்மையான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று ஹோலி பண்டிகை. ஹோலி ஒரு நிறங்களின் விழா என்பதை அறிவீர்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த விழாவைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்திருக்கிறோம்.
இந்த பண்டிகை வசந்த காலத்தின் வருகையின் குறியீடாகும். மகிழ்ச்சியின் முன்னறிவிப்பாகும். எமது இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையின் பிரதிபலிப்பாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஹோலி இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது இருதரப்பு உறவுகளில் புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல், கலாசார ரீதியாக பின்னிப் பிணைந்துள்ளன.
இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு இடைவெளியை மூடுவதே தமது நோக்கம்: சுஸ்மா சுவராஜ்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இடைவெளியை மூடும் வகையில் தமது விஜயம் உயர்மட்ட விஜயமாக அமைந்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர நேற்று இரவு அளித்த விருந்துபசாரத்தின் போதே சுஸ்மா இதனைக்குறிப்பிட்டார்.
ஏற்கனவே இந்தியாவுக்கு, இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயம் வெற்றியுடன் முடிவடைந்ததாக சுஸ்மா தெரிவித்தார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் கடந்த சில வருடங்கள் முக்கியமானவையாகும்.
இரண்டு நாடுகளிலும் மாற்று அரசாங்கங்களுக்கான வாக்குகளை மக்கள் அளித்தனர் என்று சுஸ்மா கூறினார்