மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் ஆறுமாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு 2013ஆம் ஆண்டு விஜயம் செய்தபோது அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான தேவையுள்ளமையை தாம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை 6 மாதங்களுக்கு பிற்போட்டமையை இலங்கையின் எதிர்காலம் கருதிய ஒவ்வொருவரும் வரவேற்கவில்லை.
குறிப்பாக தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறும் வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், இலங்கையின் புதிய அரசாங்கமானது குறித்த மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துவேன்.
புதிய அரசாங்கமானது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இராணுவ சூன்ய நிலை ஏற்படுத்தப்படவேண்டும். இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவேண்டும்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் செப்டம்பர் மாதம், இலங்கை தொடர்பில் வெளியிடவுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்கள் அடங்கியிருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.