இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மாணவர்களின் போராட்டங்கள் என்பது தான் முதன்மையானது.

385

 

தமிழர்களின் போராட்டங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுவது தான் விதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது
IMG_20150621_101802

வரலாற்றுக்காலம் தொட்டே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. போராட்டங்கள் என்பது மக்களின் மனங்களில் கிடக்கும் உள்ளக்குமுறல்களை வெளிக்கொண்டு வருவதும், தமது ஆற்றாமைகளையும், துயரத்தினையும், நீதியையும் எதிர்பார்த்து செய்யப்படும் ஒன்றாகும்.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மாணவர்களின் போராட்டங்கள் என்பது தான் முதன்மையானது. ஆரம்ப காலங்களில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக தெரிவின் போது புறக்கணிக்கப்பட்டமையும், அதன்பால் வெட்டுப்புள்ளிகளும், பிரதேச ரீதியிலான பல்கலைக்கழக தெரிவும் மக்கள் மத்தியில் அதீத கொதிப்பையும் பாதிப்புக்களையும் உண்டு பண்ணின.

திட்டமிட்டவகையிலான இப்புறக்கணிப்பிற்கு எதிராக மாணவர்கள் மெல்ல மெல்ல போராடத் துணிந்ததன் விளைவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும். இவ்விடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தம் எதிர்கால இன்பமயமான வாழ்க்கையை தொலைத்து களம் புகுந்தனர்.

பல்வேறு தியாகங்களும், வரலாற்றில் மறக்க முடியாத சாதனைகளையும் புரிந்தனர் அன்றைய மாணவர்களாக இருக்க வேண்டிய இன்றைய மாவீரர்கள்.

அரசாங்கங்கள் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திக்கொண்டே சென்றிருந்தன. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும், துணிந்தொரு போராட்டம் செய்திருந்தனர்.

அப்போராட்டங்கள் பரிணமித்தன. அது தனக்கான தேடு தளங்கள், இருப்பிடங்கள், என்று உருப்பெற்று கடற்படை விமானப்படை தரைப்படை என்றொரு நிழல் அரசு உருவாக்கத்தில் வந்திருந்ததை நடப்பு அரசியலில் கண்டு கொண்டிருந்தோம்.

ஆனால் கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டம் தமிழனத்திற்குள் உண்டு என்பதை தமிழ் இனத்தின் வரலாற்றில் இருந்தே கண்டு கொண்டோம். அது சோழர் காலத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் காலம் வரை உதாரணத்திற்கு அடுக்கிக்கொண்டே போக முடியும்.

விடுதலைப்போராட்டம் இன்று நிர்மூலமாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டமைக்கு காரணங்களை பல்வேறு ஆய்வாளர்கள் அடுக்கிக்கொண்டு போனாலும், முதன்மை காரணிகளில் நமது சிற்றறிவுக்கு எட்டிய விததில் கூறுவதாயின் இலங்கை இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் சிறப்பான வழிகாட்டலும், திட்டமிட்டதான தாக்குதல்களும் வன்னியில் நிகழ்த்தப்பட்டது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள் நுழைந்த ஆழ ஊடுருவும் அணியின் அதிரடி நடவடிக்கைகள் தான் இறுதிவரை இலங்கை இராணுவத்திற்கு கைகொடுத்திற்று. அதன் செயற்பாட்டை வைத்தே இராணுவம் புலிகளின் தளபதிகள் பலரைக்கொன்றது.

விடுதலைப் போராட்டம் என்பது சடுதியான வீழ்ச்சிக்கு காரணம் போராட்டத்தை வீழ்த்த அரசாங்க தரப்பு செய்த சூழ்ச்சி. தந்திரம், செயற்பாடு, இதுவே முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணி.

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் அதாவது இந்த ஆறு ஆண்டுகாலமாக யாழில் தமிழர்கள் பெரிதாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை.

ஆங்காங்கே வெளிநாட்டுத் தூதுவர்களும், ராஜதந்திரிகளும் வடக்கிற்கு விஜயம் செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். மகஜர் கையளிப்பார்கள். அழுது புலம்பல்களோடு போராட்டம் முடிவடைந்துவிடும். இவற்றில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு என்பதும் மிக மிக குறைவானதாகவே இருக்கும்.

பெரிதான ஒன்றுபட்ட எதிர்ப்பு என்பது இல்லை என்பது தான் உண்மை. 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள், மாணவிகள் மாவீரர்களுக்கு விளக்கேற்றியதாக கூறி இரவில் மாணவிகளின் விடுதிக்குள் உள்நுழைந்த படையினர் அங்கு அடாவடித்தனத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுநாள் யாழ்.பல்கலையில் நடந்த ஆர்ப்பாட்டமும், அதைத்தொடர்ந்து மாணவர்கள் மீது இராணுவமும், பொலிஸாரும் அதிரடியாக தாக்கியமை என்பது அன்றைய நாளில் மீண்டும் பேரினவாத சக்தியின் மறுவடிமாக பார்க்கப்பட்டது.

ஆனாலும், 2009இற்கு பின்னர் நிகழ்ந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அதுவே இருந்து வந்தது நேற்றுவரை.

ஆனால் நேற்று அதை உடைத்தெறிந்திருக்கின்றது மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதிவேண்டி நடத்தப்பட்ட போராட்டங்கள்.

இந்த போராட்டம் இதுவரை காலமும் நடந்த ஜனநாயக வழியிலான போராட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட போராட்டம். புதிய ஆட்சி மாற்றம், புதிய நிர்வாகிகள், என அத்தனையும் மாறியிருக்கின்ற வேளையில் கொல்லப்பட்ட மாணவிக்காக, யாழ் மாவட்ட சமூகம் மாத்திரமல்ல, வடக்கு கிழக்கு பகுதி எங்கும் ஒரு அதிர்வலைகளை உண்டு பண்ணி போராட்டம் வலுப்பெற்றிருந்தது.

இங்கு நோக்க வேண்டியது, பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக ஆசியர்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற் சங்கங்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள்,

தவிர, ஏராளமான இளைஞர்கள், பெண்கள் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்தினர் என்று யாழ்ப்பாணமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் முழுவடித்தினைப் பெற்றிருந்தது.

இங்கு அதிகம் கவனிக்க வேண்டியது போராட்டத்திற்கு வருமாறு யாருமே அழைப்பு விடுக்கவில்லை. மக்கள் தாமாகவே போராட்டத்திற்குள் குதித்தனர். இது 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்பட்ட மாற்றத்தினை வெளிக்காட்டிருக்கின்றது.

இது ஒருவேளை முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியாக இருந்திருப்பின் என்ன நிகழ்ந்திருக்கும் என்று இவ்விடத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. கிடைக்கப்பெற்ற ஜனநாயக வெளியைப்பயன்படுத்தி மக்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் முடங்கும் அளவிற்கு இப்படியொரு போராட்டம் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் நிகழ்த்தப்பட்டது என்பது ஆச்சரியம் தான்.

பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியில் பாடசாலை மாணவிகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை போராட்டம் படர்ந்திருந்தது. யாழ்.வர்த்தக சமூகத்தினரும் போராட்டத்திற்கு பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.

நேற்றைய தினம் கர்த்தால் என்று அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திக்குமுக்காடிய வேளை தான் அந்த துயரம் நடந்தது. திடீரென வன்முறை வெடித்திருக்கின்றது. மாணவர்களினது போராட்டம் அமைதியான வழியில் தான் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

ஆனால் திடீரென கலவரமாக அது மாற யார் காரணம்? நீண்ட நேரமாக அது கலவரமாக மாறும் வரை பொலிஸார் வேடிக்கை பார்த்தவாறே இருந்ததாக ஆர்ப்பாட்டத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அதற்குள் இருந்த சிலர் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாக கூறுகின்றார்கள் இன்னொரு தரப்பினர்.

வேண்டுமென்றே வன்முறையை இதற்குள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவே பலர் சமூகவலைத்தளங்களில் தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பொதுவெளியில் நோக்கில், இது உண்மையான திட்டமிட்ட முறையிலான போராட்டத்தின் திசை மாற்றல் என்பது தெளிவாக தெரிகின்றது. ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டத்தை, மாணவர்களின் பொங்கி எழுகையை திசைமாற்றி, அவர்களை முடக்குவதற்கான ஒரு எத்தணிப்பு என்பதில் ஐயமில்லை.

இன்றைய கலவரத்தின் பின்னர் கிடைத்த செய்தியின் படி மாணவி குறித்த வழக்கு அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

ஆக வழக்கினை மாற்றி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கான இன்னொரு சூழ்ச்சியாகவே இது மாறியுள்ளதாக ஊகிக்க முடிகின்றது.

நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழர் தரப்பு அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் போராடியது வித்தியாவின் படுகொலையில் தான். ஒரு பிஞ்சு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றாள்.

அவள் தமிழ் மக்களை இந்த போராட்டத்தின் மூலம் மீண்டும் ஒன்றினைத்துவிட்டு தான் சென்றிருக்கின்றாள். ஆனால் அதற்குள் ஒற்றர்களின் நுழைவு இந்த போராட்டத்தினை வேறு திசைக்கு மாற்றி இன்று கலவரத்திலும், கைதுகளிலும் கொண்டு வந்துவிட்டிருக்கின்றது.

மாணவர்களும், இளைஞர்களும் நிதானமான முறையில் போராட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொண்டிருந்தனர். ஆனால் திடீர் தாக்குதல் சம்பவம் எங்கிருந்து வந்தது என்பதை ஆராயவேண்டியது இப்பொழுது தேவையான ஒன்று.

தமிழர்கள் ஒவ்வொரு போராட்டத்திலும் தோற்றுப்போவதும் நீதிகிடைக்காமல் தவிப்பதும், தம்மை சூழவுள்ளவர்களை சரியான முறையில் இனம் காணாமல் தவறவிட்டது அன்றி வேறு எதுவும் அல்ல.

இனியாவது நிகழ்த்தப்படும் போராட்டங்களில் கயவர்கள் யார்? அவர்கள் என்ன நோக்கத்திற்காக உள் நுழைகின்றார்கள் என்பதை அறிந்து செயற்படவேண்டியிருக்கின்றது.

எங்களை அழிப்பதற்கென்றே எங்களில் பல கூட்டம் குறியாய் அலைகின்றன. அவற்றை மாணவர்களும், இளைஞர்களும் சரியாக இனம்கண்டு கொள்ளவேண்டும். ஏனெனில் மாணவர்களையும், இளைஞர்களையும் இலகுவாக உசுப்பிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்று அந்த கூட்டம் அதீத நம்பிக்கையில் இருக்கின்றது.

 

SHARE