120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தற்போது 99.5 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதில் நேதன்யாகுவின் லிகுட் கட்சி முன்னணியில் உள்ளது.
இக்கட்சி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பல தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. எனவே, இக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஷியோனிஸ்ட் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான ஷியோனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் நேதன்யாகுவின் தீவிர பாலஸ்தீன எதிர்ப்பு பிரசாரம் தேர்தல் முடிவை மாற்றியமைத்துள்ளது. இஸ்ரேல் தேர்தல் விதிமுறைப்படி இதுவரை எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது இல்லை. சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைத்துள்ளன.
அதே போன்ற தான் 65 வயது நேதன்யாகு தேசியவாதி மற்றும் மதவாத கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
ஏற்கனவே, 3 தடவை அதாவது 9 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். தற்போது 4–வது தடவை அவர் பொறுப்பு ஏற்றால் இஸ்ரேலில் நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை பெறுவார்.