இஸ்ரேல்- ஹமாஸ் மோதல்: பலி ஆயிரமாக உயர்ந்தது

375
இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் திகதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தை ஒட்டியுள்ள காஸா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர்.அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் – இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர்.

இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காஸா பகுதியை அவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 20 நாட்களாக நீடித்து வரும் இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சி பலனளிக்கவில்லை.

தாக்குதலில் சிக்கி காயமடைந்த பாலஸ்தீனியர்களை ஆஸ்பத்திரிகளுக்கு கூட கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும், இது ரமலான் நோன்புக் காலமாக உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ளவும், அவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்கவும் வசதியாக இரு தரப்பினரும் சில மணி நேரங்களுக்காவது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் 12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலில் இருந்த 12 மணி நேரத்தில் காஸா பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களை ஐ.நா.அதிகாரிகள் வெளியேற்றினர். இவற்றில் பெரும்பாலான பிரேதங்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி, சின்னாபின்னமாகி கிடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்றைய போர் நிறுத்தத்துக்கு சற்று முன்னர் காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மட்டும் 5 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியானதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களில் இருவர் பலியானதை இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

காஸா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை பாலஸ்தீனிய எல்லையோரம் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதிக்கும் பரவியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் இப்பகுதியில் இஸ்ரேல் போலீசாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, காஸா பகுதி மீது கடந்த 20 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் தரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர். காஸா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இம்முகாம்களில் போதிய உணவு மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பலர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

SHARE