ஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை!!! – யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள்மாநாட்டில் தீர்மானம்
யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு இலங்கையில் தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்களின் இன்றைய நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் அத்தோடு உலகில் போரினாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்படும் பெண்களுடன் கைகோர்க்கவும் யேர்மனி பிராங்க்போர்ட் நகரில் “இலங்கையில் இனப்படுகொலைக்குள்ளாகும் ஈழத்து தமிழ் பெண்கள் ” மாநாடு நடைபெற்றது . இம் மாநாட்டில் தாயகத்தில் இருந்து வடமாகாண சபையின் உறுப்பினரும் காணாமல் போனோர் விடையமாக அயராது உழைக்கும் திருமதி அனந்தி சசிதரன் அவர்களும் மற்றும் நோர்வே , பிரான்ஸ் ,சுவிஸ் என பல நாடுகளில் இருந்தும் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் . மாநாட்டில் கலந்துகொண்ட குர்டிஸ்தான் பெண்கள் ,ஆப்ரிக்கா நாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் , மற்றும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஏனைய மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறையை எடுத்துரைத்ததோடு ஈழத்து தமிழ் பெண்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுப்போம் என தமது தோழமையை வெளிக்காட்டினர் . நோர்வே நாட்டில் இருந்து கலந்துகொண்ட முன்னாள் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மை இயக்குனர் மதிப்புக்குரிய Bjorg Spillum அவர்கள் தமிழ் பெண்கள் படும் அவலங்களை தாம் நேரில் சென்று கண்டதாகும் அத்தோடு அவர்கள் சுதந்திரமாக வாழ்வதுக்கு நாம் உழைக்கவேண்டும் எனவும் தனது கருத்தை பதிவுசெய்தார் . அத்தோடு நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் தாயகத்தில் தமிழ் பெண்கள் படும் அவலத்தை நிறுத்துவதுக்கு புலம்பெயர் தமிழ் பெண்கள் செய்யும் அரசியற்திட்டங்களை விளக்கினார் . மாநாட்டின் இறுதியில் பேச்சாளர்களாக கலந்துகொண்டவர்களால் ஈழத்து தமிழ் பெண்களுக்கு இனப் படுகொலை நடப்பதாகவும் , அத்தோடு அனைத்து நாடுகளின் பெண்கள் அமைப்புகளும் இணைந்து பெண்கள் உரிமைக்காக சர்வதேச ரீதியாக போராட வேண்டும் எனவும் தீர்மானம் எட்டப்பட்டது . யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது