உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் தர்மசேனா நாளை இடம்பெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நடுவராகவும் கடமையாற்றவுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை தர்மசேனா ஏற்படுத்தவுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நியூசிலாந்து – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே நாளைய தினம் மெல்பர்னில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு நடுவர்களாக இலங்கையை சேர்ந்த குமார தர்மசேனா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்பாரோ ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.
இதில் குமார தர்மசேனா கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர். அந்த வகையில் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறை.
கொழும்பு நகரில் பிறந்த தர்மசேனாவுக்கு தற்போது 43 வயதாகிறது. ஆல்ரவுண்டரான இவர் இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகலும் 141 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக நடுவராக பணியாற்றத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.