உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நேவால் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்

420
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், உலக சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பை வாய்ப்பு பெற்றார். இதனால் இன்று நடைபெற்ற  2ம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் நடாலியா பெர்மினோவாவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாய்னா, 31 நிமிடங்களில் 21-11, 21-9 என்ற நேர்செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும் (தரநிலை-11) முதல் சுற்றில் பை வாய்ப்பு பெற்றிருந்தார். இவர், நாளை நடைபெறும் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் ஓல்காவை சந்திக்க உள்ளார்.

ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம் முதல் சுற்றில் தன்னை விட தரநிலையில் முன்னிலையில் இருக்கும் கெனிச்சி டாகோவை (ஜப்பான்) வென்றார். 2ம் சுற்றில் தாய்லாந்து வீரர் டானங்சாக்கை சந்திக்க உள்ளார்.

SHARE