உலக பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் காஷ்யப்

388
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 21-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான பருபள்ளி காஷ்யப் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காஷ்யப், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மன் வீரர் டைடர் டாம்கியை எதிர்கொண்டார். டாம்கிக்கு எதிராக 5-1 என வலுவான வெற்றி கணக்கை காஷ்யப் வைத்திருந்தார். எனினும், தற்போது பார்மில் இருக்கும் டாம்கியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய காஷ்யப், 24-26, 21-13, 18-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன் ஜோடி, பிரேசில் நாட்டின் ஆர்தசோ-பேபியானா சில்வா ஜோடியை 21-12, 21-14 என்ற நேர்செட்களில் வென்று முன்னேறியது. இரண்டாம் சுற்றில் இந்திய ஜோடிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இந்த சுற்றில், 6-ம் தரநிலையில் உள்ள மைக்கேல் புச்சஸ்-பர்கிட் மிச்செல்ஸ் (ஜெர்மன்) ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

SHARE