உலக வில்வித்தை போட்டி: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா குமாரி

436
உலகக்கோப்பை வில்வித்தை தொடரின் அரையிறுதியில் (தனிநபர் ரிகர்வ்) தோல்வியடைந்த இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.

போலந்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஜிங் ஜூவுடன் விளையாடிய தீபிகா குமாரி, 5-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கும் இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

இருப்பினும் இந்த தொடரில் அவர் வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், ரஷ்ய வீராங்கனை டாடியானா செகினாவை தீபிகா எதிர்கொள்கிறார்.

மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பூர்வஷா ஷெண்டே காலிறுதியில் கம்போடியாவின் சாரா லோபசிடம் தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் ஒருவரும் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறவில்லை.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-பூர்வஷா ஷெண்டே ஜோடி அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் காவின்- ஜெல்லென்தின் ஜோடியை எதிர்கொண்டது. இரு அணிகளும் தலா 154 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன. ஷட் ஆப் முறையிலும் இரு தரப்பினரும் சம புள்ளிகளையே பெற்றனர். இதையடுத்து, ஒவ்வொரு சுற்றிலும் பெற்ற முன்னிலை அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

SHARE