ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாத்துக் கொண்டு மக்களின் மீது வரிச்சுமையினை ஏற்றி அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றது என்று கூறுவது கனவிலும் நடைபெறாதது ஒன்று என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை இரவு (18.03.2023) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற உழைக்கும் மக்களின் அரசுக்கு எதிரான தீப்பந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டுமானால் முதலில் இனவாதத்தினை துடைத்தெரிந்து மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந் நாட்டில் இனவாதம் இன்றும் அரச கொள்கையாக உள்ளது. ஊழல்கள் புரிந்த அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். உழைப்பாளிகள் வரிக்கொள்கை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் சுரண்டப்படுகின்றனர். மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவாறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.
இப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்களான செந்தில்வேலர் மற்றும் கதிர்காமநாதன் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கே ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, இப் போராட்டம் என்பது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சார்ந்த போராட்டமாகும். இதில் சகல தரப்புக்களும் இணைய வேண்டும்.