உக்ரைனின் தெற்கில் உள்ள ஹெர்சன் நகரம் ரஷ்யாவுடன் இணைய விரும்புவதாக ஹெர்சன் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர். ஹெர்சன் நகரை இணைத்துக்கொள்ளும் படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தாம் கேட்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் யோசனையை ரஷ்யா வரவேற்கிறதாகவும் ஹெர்சன் நகரின் எதிர்காலத்தை அந்நகரமே முடிவு செய்ய வேண்டும் என்றும் ரஷ்யா கூறியது. இதனையடுத்து அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தும் சாத்தியம் உள்ளது.
இது ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஒருவகையான சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கும் வகையில் அமையும் என கூறப்படுகின்றது. கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமான உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பில் , ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைனின் முதல் நகரம் ஹெர்சன் ஆகும்.
இந்நிலையில் ஆண்டு இறுதிக்குள் அந்நகரம் முழுமையாக ரஷ்யாவின் சட்டத்துக்கு உட்பட்டுவிடும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை ஹெர்சன் நகரம் 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தின் வடக்கில் அமைந்துள்ளதுடன் , தீபகற்பத்திற்கான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு ஹெர்சன் நகரமே அவசியமானதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.