ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்

436
ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

அமெரிக்காவில் விடுதலைப் புலிகளின் லட்சக்கணக்கான வாக்குகள் இருக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் வாக்குகள் மூலமே அங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது புலிகளின் வாக்குகள்.

எனவேதான் தற்போது ஒபாமாவும் கமரூனும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்ப நடந்து கொள்கின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த இரண்டு நாடுகளிலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் உதவியுடனேயே தெரிவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் யோசனைக்காக கமரூன் பல நாடுகளுக்கு கடிதங்களை எழுதினார்.

பராக் ஒபாமாவின் அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பன இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தியுள்ளன.

2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையை நிறைவேற்ற வேறு காரணங்கள் இல்லை.

இந்தவகையில் ஒபாமாவும் கமரூனும் 30 வருடங்களாக நாட்டை அச்சுறுத்திய விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவதாக பவித்ரா குற்றம் சுமத்தினார்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதற்கு இடம் தரமாட்டார்.

மேலும், விடுதலைப் புலிகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, பிரபாகரன் முன்னிலையில் மண்டியிடும் தலைவர் ஒருவரை நாட்டின் தெற்கில் ஆட்சியில் அமர்த்துவதே அவர்களின் நோக்கம். இதற்காவே அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்துள்ளனர் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

TPN NEWS

 

SHARE