காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (30.08.2014) அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றதுடன், மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா அரச அதிபரைச் சந்திக்கச்சென்றபொழுது அதனை மேற்கொள்ளவிடாது பொலிஸார் தடுத்ததையடுத்து பொலிஸாருக்கும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும், வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும், மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினம் சனிக்கிழமை ஆகையால் அந்த மகஜரினை வவுனியா அரச அதிபரிடம் கையளிக்கமுடியாதிருப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா தெரிவித்ததுடன் அந்த மகஜரினை காணாமற்போனோர் சங்கத்தின் தலைவியிடமிருந்து பெற்றுக்கொண்டு தான் அதனை கையளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும் 03 நாட்கள் கடந்துள்ள இந்நிலையில் இன்னமும் அம் மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்படவில்லை.
இதனால் மக்கள் விசனமடைந்துள்ளனர். கையளிக்கப்பட்டதா? இல்லையா? என்ற ரீதியில் மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்களும், வடமாகாண சபை உறுப்பினர்களும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் மாத்திரம் வலம்வருவதாகவும், தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளில் அக்கறைகாட்டப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ளதுடன், தங்களுடைய பிரச்சினைகளை பாராளுமன்றில் கொண்டுசென்று தெரிவிப்பதற்காகவே இப்பிரதிநிதிகளை தாம் வாக்களித்து தெரிவுசெய்துள்ளோம் எனவும் ஆனால் இவர்கள் மக்களின் துன்பதுயரங்களை அறிந்து செயற்படுவதில்லை என்றும் அன்றைய தினக் கூட்டத்தின் இறுதிநேரத்தில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நிலைமை இவ்வாறிருக்கின்றபொழுது இவ்விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் பத்திரிகை நேரடியாக தொடர்புகொண்டு வினவியபொழுது, காணாமற்போனோருக்கான இக்கூட்டத்தொடரானது ஒழுங்குசெய்யப்பட்டிருந்த அன்றைய நாள் ஒரு சனிக்கிழமை என்கின்றதால் அரச அதிபர் அங்கு இருக்கவில்லை எனவும் ஆகவே அதனைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை இம்மகஜரினை கையளிப்பதாக வாக்குறுதியளித்து மகஜரினை பெற்றுக்கொண்டேன். உண்மையில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள் ஒழுங்காக செயற்படுத்தியிருக்கவேண்டும். தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை கேட்டறிவதற்காக அவ்விடத்திற்கு வந்து நானும் பங்குபற்றினேன். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வருகை தராததன் காரணமாகவே நான் மகஜரினை பெற்றுக்கொண்டேன்.
அரச அதிபர் இல்லையெனக் கூறி பொலிஸார் என்னைத் தடுத்தனர். ஆகவே இந்த மகஜரினை திங்கட்கிழமை கையளிப்பதாக எண்ணியிருந்தோம். அதற்கு சரியான காலநேரங்கள் ஏற்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த மகஜரினை வவுனியா அரச அதிபரிடம் கையளிப்போம் என மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.
மாவை சேனாதிராஜா அவர்களின் கருத்துக்களும் தவறில்லை என்றே கூறவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரோ, வடமாகாணசபை உறுப்பினர்களோ, வட மாகாணசபை அமைச்சர்களோ தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தினை முன்னெடுக்கின்றபொழுது, கூடவே விசமிகளும் கலந்து செயற்படுவது வழக்கம். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு எமது அரசியலை முன்னெடுத்துச்செல்லமுடியாது என்பது திட்டவட்டமான உண்மையாகும். உண்மையில் இம்மகஜர் கையளிக்கப்படவில்லையாயின் காணாமற்போனோருக்கான சங்கம் மீண்டுமொரு பேரணியினை ஏற்படுத்தி இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும் என இப்போராட்டத்தின் போது பங்குபற்றிய மக்கள் தெரிவித்தனர். காலத்தின் தேவை கருதி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
TPN NEWS