விடுதலைப் போராட்டத்தில் ஒரு அம்சமாக காந்தியின் அஹிம்சை வழியில் விடுதலைப் புலிகளின் லெப்டினன் கேணல் திலீபன் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று 1987 செம்டம்பர், 15ம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அந்த கோரிக்கைகள் என்னவென்றால்
மீள்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்
.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இக்கோரிக்கைகள் அடிப்படையில் தியாகி திலீபன் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் முன்றலில் உண்ணாவிரதமிருந்து. 1987 செப்டம்பர். 27 சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு (யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர்)தியாக மரணமடைந்தார். உலகில் மனச்சாட்சி மரணித்துப்போய் தமிழினமே முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட அநீதி நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நிலையில் எமது வரலாற்றில் 24 வருடத்திற்கு முன்னர் பதிவு செய்த தியாக மரணம் ஒரு வரலாற்று திருப்பு முனையைக் கொண்டு வந்தது.
இராசையாக பார்த்தீபன் என்ற பெயரில் சாதாரணமாக வாழ்ந்து வந்த திலீபன் 1974 தை மாதம் 10 ந் திகதி விடுதலைப்புலிகளோடு இணைந்து கொண்டார். அன்று தான் இரண்டாவது உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உழகத்தமிழர் மாநாடுதான் இராசையா பார்த்தீபனை விடுதலைப்புலிகள் பக்கம் திசை திருப்பியது. 10 வது வகுப்பு மாணவனாக உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த பார்த்தீபன் அங்கு நடந்த கொடூரத்தை பார்த்தார்.
அஞ்சிவிடவில்லை 10 தமிழர்களது உயிர்களை பழிவாங்கிய கொடூரத்தை 15 வயது சிறுவனான பார்த்தீபன் கண்ணுற்று திகைத்துப்போனார். இதனைத் தொடர்ந்து 1977ம் ஆண்டு சிங்கள இனவாத அரசியல் வாதிகளால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை நிகழ்வு பார்த்தீபனின் மனதில் ஆழப்பதிந்தது. சிங்கள அரசின் இனவிரோதப் போக்கினால் பொங்கியெழுந்த பார்த்தீபன் தமிழீழ போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு எவ்வாறு செயற்படலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
தியாகி திலீபன் படிப்பிலும் சிறந்தவர். 1978ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.உயர்தரத்தில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவானார். அதன் பின்னர் 1983ம் ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு உறுப்பினராக திலீபன் என்ற பெயரோடு, அதன் பணிகளை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தன்னை பிரச்சாரப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட திலீபன் தனித்திறமையினால் மானிப்பாய் வட்டுக்கோட்டை பகுதிகளுக்குப் பொறுப்பாளராக இருந்தார்.
மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் மிகவும் சாதுரியமாக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை கொண்டு அரசியல் பிரிவு பொறுப்பாளராக பதவியேற்றார். இவரது ஆளுமையை நன்கு கவனித்த கிட்டு மாமா இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக பிரபாகரனுக்கு அறிவித்தார். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழ் சுதந்திரம் மலரட்டும்’ என்ற கோட்பாட்டில் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்தார். இவர் களமுனைகளிலும் சிறந்து விளங்கினார். மூத்த தளபதி கிட்டு மாமாவுடன் இணைந்து பல்வேறு தாக்குதலுக்கு வீரம் சேர்த்துக் கொடுத்தார். வடமராட்சி வல்லையில் நடந்த இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வயிற்றில் குண்டு பாய்ந்து பலந்த காயங்களுக்குள்ளானார்.
காயத்தின் தீவிரத்தால் 14 அங்குல சிறுகுடல் வெட்டி அகற்றப்பட்டது. தொடர் சிகிற்சையால் தியாகி திலீபன் பூரண குணமடைந்தார். தனது பங்களிப்பினை எப்படியாவது தொடரவேண்டும் என திடசங்கற்பம் கொண்ட திலீபன் அண்ணா பத்திரிகைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். களத்தில் என்ற மாதப் பத்திரிகை மூலம் விடுதலை இயக்கத்தின் கொள்கைகள் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பித்தார். இத்தோடு நின்றுவிடாது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மற்றும் சில தொழிற் சங்கங்களும் திலீபன் அண்ணாவின் முன் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையில் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த திலீபன் அண்ணா தனது வல்லாதிக்கப் போக்கினை மீள் உறுதிப்படுத்துவதற்காக அமைதிப்படை என்ற போர்வையில் தமிழீழத்தில் கால் பதித்து அட்டூழியம் செய்து வந்த இந்தியாவின் முகத்திரையினை கிழித்து அம்பலப்படுத்தி வீரவரலாறாகினார்.
இதோ அந்த தியாகப் பயணம் ஆரம்பம்……
இதே நாள் 1987ம் ஆண்டு காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகியது. இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என முடிவெடுத்து தானைத் தலைவன் பிரபாகரன் அவர்களிடம் ஆசியும் ஆணையும் பெற்று காலை 9.30 மணிக்கு புறப்படுகிறார். நல்லூர் வீதியை நோக்கி…….
வீரத்தமிழ் மகனுக்கு வாழ்த்துக் கூறி கலையும் பாடசாலைப் பிள்ளைகளிடம் இருந்து விடைபெற்று வோக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் கதைத்துவிட்டு வாகனத்தில் புறப்பட்டது அந்த தியாக வேங்கை.
சொர்ணம் அண்ணா, அன்ரன் மாஸ்ரர், முரளி அண்ணா, கவிஞர் காசி ஆனந்தன் ஐயா உள்ளிட்டவர்களுடன் தியாக வேள்வி நடாத்தும் இடம் நோக்கி வாகனத்தில் பயணிக்கின்றார் திலீபன் அண்ணா.
அந்தப் பயணந்தான் இறுதியானதாக அமைந்து வரலாற்றில் நிலைத்துவிடப்போகின்றது. என்பதனை திலீபன் அண்ணாவோ அல்லது அவருடன் சென்றவர்களோ அந்த நேரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தும் திலீபன் அண்ணா மாத்திரம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும்வரை உண்ணாவிரம் இருப்பது என்பதில் உறுதியாகவே இருந்தார்.
இந்த ஐந்து நிபந்தனைகளும் மேடையில் வாசித்து காண்பிக்கப்பட்டன. இக்கோரிக்கைகளை 13.09.1987 அன்று இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 15.09.1987 வரை எந்தவிதப் பதிலும் தூதுவரிடம் இருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மறியல் போராட்டம் நடாத்துவது என தீர்மாணிக்கப்பட்டது.
தமிழினத்தின் விடுதலைக்காக தன்னையே உருக்கிக் கொண்டு தியாகப் பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் திலீபன் அண்ணாவின் உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியமை திலீபன் அண்ணாவின் உடல் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டதனை உறுதிப்படுத்தியது.
அன்றைய நாளின் மாலைப் பொழுதில் இந்திய அமைதிப்படையின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த கேணல் தர இராணுவ அதிகாரி திலீபன் அண்ணாவைப் பார்க்க வந்தார். அலை கடல் என திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை விலத்திக் கொண்டு இந்திய படையதிகாரி வந்துகொண்டிருந்த சமயத்தில் உணர்ச்சிக் கொத்தளிப்பில் இருந்த மக்கள் தாக்க முயன்ற போதும் போராளிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
திலீபன் அண்ணாவின் உடல் நிலை மோசமாகி வருவதையிட்டு கூடியிருக்கும் மக்களும் புலிப்போராளிகளும் ஆவேசமடைந்து வருவதாகவும். அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் எனவும் இந்திய படையதிகாரியிடம் தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்துக் கூறியிருந்தனர். அவற்றைக் கேட்ட இந்திய படையதிகாரி தான் சென்று உயர் அதிகாரிகளுடன் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிச்சென்றிருந்தார்.
அவரது பதில் கூட இருந்தவர்களிடம் சற்று நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருந்தது. ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற திலீபன் அண்ணாவின் கனவு இன்று 24 ஆண்டுகள் கழிந்து ஜெனீவா நகரில் நனவாகவும் வாய்ப்புக்கள் இருக்கிறது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. செப்டம்பர் 26.2012 அன்று இவரது நினைவு நாள் என்பதும் குளிப்பிடத்தக்கதாகும்.
-நெற்றிப்பொறியன்-