கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 14 பேர் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கடதாசிகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு. முன்னணியும் முஸ்லிம் காங்கிர ஸும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு முன்னைய ஒப்பந்தத்தின்படி விட்டுக்கொடுப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்வதில்லை எனவும் இருதரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த 6ஆம் திகதி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஹாபிஸ் நஸீர் அஹமட் 9ஆம் திகதி கிழக்கு மாகாண அமைச்சுக்கள் அனைத்தையும் பொறுப்பேற்றார். இதன் பின்னர் அமைச்சர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை மீண்டும் ஒப்படைத்தனர். இந்த நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஆரியவதி கலபதியும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஐ.மன்சூரும் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர். இதையடுத்து, கிழக்கு மாகாண சபையில் சர்ச்சைகள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சு உட்பட இரண்டு அமைச்சுக்களை எதிர்பார்த்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கல்வி அமைச்சு ஆரியவதி கலபதிக்கு வழங்கப்பட்டதையடு்த்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியபோதும், கடந்த வௌ்ளிக்கிழமை இரு அமைச்சர்கள் பதவியேற்ற வைபவத்திற்குக் கூட தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என விமலவீர திசாநாயக்க தெரிவித்தார். இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கடதாசியை நாளை திங்கட்கிழமை வாபஸ் பெறப்போவதாகவும் கிழக்கு மாகாண சபை ஐ.ம.சு. முன்னணி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார். மேலும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் நிலை தொடர்பில் அம்பாறையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாங்கள் ஓர் உடன்பாட்டின் அடிப்படையிலேயே மு.கா.வைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வருவதற்கு சட்டபூர்வமான ஆதரவை வழங்கியிருந்தோம். கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சரை பெற்றதன் பின்னர் மு.கா. உடன்பாட்டினை மீறி செயற்பட்டு வருகின்றது.
இதனால் தங்களால் வழங்கப்பட்ட சட்டரீதியான ஆதரவை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினை மு.கா. ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரஸூக்கு முதலமைச்சுப் பதவிக்கான அங்கீகாரம் ஒன்றினையே வழங்கினோம். அதை தவிர, ஏனைய அமைச்சுப் பதவிகள் பங்கீடு மற்றும் தேசிய அரசாங்கம் பற்றி எதுவும் எம்மிடம் கலந்தாலோசிக்கவில்லை. மு.கா.வின் முன்னுக்குப்பின் முரனான செயற்பாட்டின் காரணமாக இன்று கிழக்கு மாகாண சபையின் நிலை குறித்து மக்கள் குழம்பியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சபையின் ஸ்திரமான நிலையும் குழம்பியுள்ளது. மு.கா. நல்லெண்ணெத்தை வெளிக்காட்டுவதாகவும், நல்லாட்சி ஏற்படுத்துவதாகவும், தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப் போவதாகவும் கூறி ஆதரவு வழங்கிய எம்மை அவமதிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.-