கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் தேர்வில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மிகவும் வருத்தத்துக்குரியதாகும். இத் தாமதத்தினால்
மாகாணசபை ஊழியர்களுக்கும் அச்சபை பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. சபையின்
வரவுசெலவுத் திட்டம்கூட நிறைவேற்றப்படாத நிலையில் நிலைமை இனபேதமாக மாறி ஒரு தமிழரோ அல்லது இஸ்லாமியரோ
மட்டும்தான் தெரிவாக வேண்டும் அல்லது தெரிவாக முடியுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் வேடிக்கை யாதெனில் இச்சபை
வடமாகாண சபையுடன் இணைக்கப்பட்டிருந்து உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய பிரிக்கப்பட்ட சபையாகும். இவ்விரு சபைகளையும்
மீண்டும் இணைக்க வேண்டுமென விரும்புவோர் அதற்கு உதவ வேண்டுமே அன்றி முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது.
மேலிடத்தினர் எவரினதும் உதவியை நாடாமல் சம்பந்தப்பட்ட இரு சாராரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். ஓர்
அரசியல் கட்சி முன் யோசனை எதுவுமின்றி தாம் இஷ்டப்பட்டவரை தெரிவுசெய்யுமாறு மேதகு ஜனாதிபதி அவர்களை நாடியது
அவருக்கு ஓர் சங்கடமான நிலைமையை உருவாக்கியது. அதில் தலையிடுவதில்லையென கூறி ஜனாதிபதி அவர்கள் விலகிக்கொண்டமை
ஆச்சரியப்படுவதற்கில்லை. சட்டத்தில் இடமின்மையால் ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டே இருக்க முடியாது. தமிழ் தேசிய
கூடட்மைப்பின் இந்த நடவடிக்கை பலரால் கேலிக்குரியதென விமர்சிக்கப்பட்டது. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்
ஒருவர் ஆற்றிய உரையில் துவேசமும் இனவாதமும் தூண்டப்படுவதாக வெளிக்காட்டியது. இந்த உரை எதிர்காலத்தில் இவ்விரு
மாகாணங்களின் இணைப்பு சாத்தியமாகுமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
இதற்கு உடனடி பரிகாரமாக சபை உறுப்பினர்கள் தமக்கு விரும்பிய ஒருவரை இன மத பேதமின்றி தெரிவு செய்வதே. அவசியம்
ஏற்படின் இரகசிய வாக்கெடுப்பு முறைமையையும் கையாளலாம்.
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ