சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும்-அமைச்சர் ராஜித சேனாரட்ன

486

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிச்சயமாக அது நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு மிகவும் பாரதூரமானதாகவே இருக்கும். அத்துடன் பாரிய சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

போரை வெற்றி கொளவதற்கு பலமும் புத்திசாலித்தனமும் தேவைப்பட்டது. ஆனால் தற்போது எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களையும் சவால்களையும் வெற்றி கொள்ள புத்திசாலித்தனமே தேவை. மாறாக சண்டித்தனத்தாலோ வாய்ச்சவடால்களாலோ சர்வதேச அழுத்தங்களை வெற்றி கொள்ள முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோரி வந்த தமிழ் தரப்பினர் போர் முடிவடைந்ததும் முதற்தடவையாக ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்துக்கு இணங்கினார்கள். ஆனால் அரசாங்கம் அதனைக் கருத்தில் கொள்ளாமல் காலதாமதாகியதால் அவர்கள் மீண்டும் தமது பயணத்தை மாற்றியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எமது அரசியல் தலைவர்கள் கைநழுவவிட்டனர். சிலர் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போர் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் உரிய முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைத்திருக்கலாம்.. அவ்வாறு செய்திருந்தால் இன்று இவ்வாறான பாரிய சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

ஆனால் இன்று சர்வதேச விசாரணைவரை  சென்றுள்ளது. இன்று சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கைக்குள் எந்தவொரு விசாரணைக் குழுவையும் அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது மிகவும் முட்டாள்தனமான வாதமாகும்.

இந்த விசாரணையில் பிரதிவாதிகளே நாம் தான். எனவே நாம் இந்த விசாரணையில் கலந்து கொள்ளாமல் விசாரணைகள் நடக்குமானால் முடிவு பயங்கரமானதும் பாரதூரமானதுமாக இருக்கும். எனவே இவ்விடயம் தொடர்பில் நன்றாகச் சிந்தித்து இராஜதந்திர ரீதியில் தான் அணுக வேண்டும்.

ஐநா போன்ற அமைப்புகள் சில சமயங்களில் நியாயமாகவும் சில சமயங்களில் நியாயமற்ற முறையிலும் செயற்படுகின்றன. ஆனால் இவ்வாறான அமைப்புகளை சரி செய்வதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ எம்மைப் போன்ற நாடுகளுக்கு போதிய பலமில்லை. எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இருந்து எவ்வாறு தப்புவது அல்லது எவ்வாறு அவற்றிற்கு முகம்கொடுப்பது என்றே நாம் சிந்திக்க வேண்டும்.  மாறாக சண்டித்தனமோ வாய்ச்சவடாலோ காட்டக்கூடாது.

ஐநா சபையின் கொளகைப் பிரகடனத்தில் நாமும் கைச்சாத்திட்டுள்ளோம். எனவே இவ்வாறான பிரச்சினைகளை அதன் அடிப்படையிலேயே அணுக வேண்டும். இல்லையேல் பாரிய எதிர்விளைவுகளையே சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது நாட்டுக்கெதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படுமானால் பொருளாதாரம் பாதிப்படையும். அத்துடன் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்க வேண்டிவரும்.

இவ்வாறான சவால்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அப்பொழுது சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார்.

 

SHARE