சாய்னா நேவால் வேதனை

482
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான். சாய்னா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று எழுதியிருப்பதாவது:–

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இன்னொரு விஷயம் என்னை இன்னும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் நான் பதக்கம் வென்றதற்காக ஆந்திர அரசாங்கம் (மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்த போது) எனக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால் அந்த தொகை இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை. இதனால் வேதனையும், வருத்தமும் அடைந்துள்ளேன். இது தொடர்பாக அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த பரிசை பெறுவதற்கு நான் தகுதியானவர் என்பதால் தான் இதை கேட்கிறேன்.

தெலுங்கானாவை சேர்ந்தவராக இருப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். எனது மாநிலத்திற்காக மேலும் பட்டங்களை வெல்வேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு  சாய்னா கூறியுள்ளார்.

கிரண்குமார் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆந்திர அரசு, ஒலிம்பிக்கில் சாய்னா பதக்கம் பெற்ற போது ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE