யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விஷேட அதிரடிப் படையினரின் அதியுட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும்இடையில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, நீதிபதி இளஞ்செழினின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்பின்னர், யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய நீதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனுக்கு 8 சப் இன்ஸ்பெக்டர் பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், வட பிராந்தியத்திற்கான விசேட அதிரடிப் படையின் தளபதி நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் நீதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர், வட பிராந்தியத்திற்கான விஷேட அதிரடிப் படையின் தளபதி, கொழும்பு விஷேட அதிரடிப் படையின் தளபதியுடன் தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனுக்கு தாம் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நீதிபதிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இடைநிறுத்தப்பட்டு, 8 விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் வாகனத் தொடரணியும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனின் வீட்டிற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் பொலிஸார் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியை நாளை நடைபெறவுள்ளது.
நாளை சிலாபம் தலவத்தையில் நடைபெறவுள்ள இறுதிக் கிரியையில் நீதிபதி இளஞ்செழியன் கலந்துகொள்வதற்காக விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ள அதேவேளை, அதிரடிப் படையினரின் வாகனத் தொடரணியும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.