.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்

396

DSCI1625

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

101 DSCI1625

காணாமற்போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் சமர்ப்பிக்க கோரி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ஊடகங்களிடம் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டுள்ள அவர், “பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். உருவப்பொம்மையை எரித்தது ஒரு தனிப்பட்ட நபர். அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.” என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு முரணாக சுமந்திரன் செயற்பட்டு வருகின்றார். எங்களுக்குத் தெரியும்படியாக எதுவும் செய்வதில்லை. தனது தீர்மானத்தின் படி நடந்து வருகின்றார்.

எனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு வருவது வழமையானது. அதற்காக கொடும்பாவி எரிக்கும் அளவுக்கு இல்லை. சுதந்திர தினத்தில் கலந்துகொண்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரதினத்தை பகிஷ்கரிக்கவில்லையென கூறியமையாலேயே என சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

நாங்கள் செல்லமாட்டோம் எனக்கூறியிருந்தோம். அவர் ஒரு சட்டத்தரணி என்பதால் செல்லமாட்டோம் என்று தானே கூறினார்கள், பகிஷ்கரிப்பதாக கூறவில்லையென வாதாடுகின்றார். அவரது சட்டத்திறன் நீதிமன்றத்தில் இருக்கவேண்டும். அதனை எங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. நாங்கள் படிப்பறிவில்லாத முட்டாள்கள் இல்லை.

சுமந்திரனுக்கு தைரியம் இருந்தால் தனிப்பட்ட முறையில் சுதந்திர தினத்தில் கலந்துகொண்டேன் என்று மக்கள் மத்தியில் கூறவேண்டும். சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சியும், கூட்டமைப்பும் விசாரணை நடத்தவேண்டும்.” என்றுள்ளார்.

SHARE